Tuesday, July 17, 2012

கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம்












கீதை 13 : 1 அர்ச்சுணன் கேட்கிறான் : கேசவா ! பிரகிருதி மற்றும் புருஷன் ; களம் மற்றும் துய்த்தறிகிறவன் மேலும் ஞானம் மற்றும் தெய்வீக அன்பில் திளைக்கிறவன் என்பவைகளைப்பற்றி ஆழமாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்
 
கீதை 13 : 2 கிரிஸ்னர் கூறினார் : களம் என்பது சரீரம் அதில் இயங்குகிற ஆத்மாவே துய்த்து அறிகிறவன் . ஞானம் என்பது முழுமையான தெளிவு . அதோடு ஒத்திசைந்து நாளுக்கு நாள் உள்விளையும் தெய்வீக அன்பை பெருக்குகிறவனே ஞேயன் யோகி
 
கீதை 13 : 3 பாரத குலத்தோன்றலே ! சரீரத்தையும் அதிலிருந்து அறிந்துணர்கிறவனையும் ( ஜீவாத்மாவையும் ) உணர்ந்து கொள்வதே ஞானமடைதலாகும் . மேலும் எல்லா மனிதர்களின் சரீரங்களிலும் அறிந்துணர்கிறவனாக என்னை ( பரமாத்மாவாக ) உணர்ந்துகொள்வதே  மெய்ஞான விருத்தியாகும்  .

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஞானம் பயிலும் சாதகனுக்கு முதலில் தேவை விணா ! அதாவது கேள்வி ! புரிந்தாலும் புரியாவிட்டாலும் எங்காவது கேள்விப்பட்டிருந்தால் மட்டுமே போதுமானது ! பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கேட்கிற காது காதில் விழுகிற எதையும் கிரகிக்கிற காது முதலாவது வேண்டும்
அது ஏற்ற சமயத்தில் ஏற்ற குருவிடம் தன்னை தெளிவுபடுத்திக்கொள்ள முனையும் அந்த ஆர்வம் இருப்பவருக்கு மட்டுமே குருவாலும் உபதேசிக்க முடியும்
 
பிரம்மத்தைப்பற்றிய ரகசியங்களை மேற்கண்ட மூன்று ஜோடி கேள்விகளின் தெளிவால் உணர்ந்து விடலாம் தபஸ்விகளுக்கு எட்டாத இவ்விசயங்களை எங்கோ கேட்டு வைத்திருந்ததால் மட்டுமே அர்சுணனால் இந்த கேள்வியை கேட்க முடிந்தது
 
ஞானம் பயில்வோருக்கு இந்த குணம் ஒரு தகுதி எதையும் முதலாவது கேட்டு வைத்துக்கொள்ளவேண்டும்
 
பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கு பிடித்தமானவைகளை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள் பிடித்தமற்றவைகளை கேள்விப்படும்போதே உணர்ச்சி வயப்பட்டு எதிர்க்கத்தொடங்கி விடுகிறார்கள் உள்ளே நுழையவே விடுவதில்லை
 
சற்குரு இயேசுவும் கேட்கக்காதுள்ளவன் கேட்கக்கடவன் கேட்கக்காதுள்ளவன் கேட்கக்கடவன் என்ற வாசகத்தை அடிக்கடி உச்சரித்துள்ளார்
 
கண்ணிருந்தும் குருடர்களாய் காதிருந்தும் செவிடர்களாய் இவ்வுலகத்தின் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம் !
தனக்கு புரியாத விசயத்தை கேள்விப்பட்டிருந்ததால் அர்ச்சுணனும் கேட்டார் யுகபுருஷனிடம் தெளிவையும் பெற்றுக்கொண்டார்
இம்மூன்றுமே ஒரே மாதிரியானவையே
1) பிரக்ருதி மற்றும் புருஷன் :
பிரம்மம் பிரபஞ்சமாக ஜட இயற்கையாக ஈரேழு பதினாலு லோகமாக கண்ணால் காணக்கூடியதாக கண்ணால் காணாததை நம்ப முடியாததாக - ஞானத்தால் நம்பக்கூடியதாக பலவாறு நம்மைச்சுற்றிலும் உள்ளதே அது பிரக்ருதி
இவ்வளவும் அது அது பாட்டுக்கு இருந்தாலும் அதை இன்னது இன்னது என கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிற ஒரு வேலையை மனிதன் ஒருவன் மட்டுமே செய்கிறான் எந்த மனிதனும் அவனவன் தரத்துக்கு எதையாவது உணர்ந்து கொண்டேதான் இருப்பான் அதுதான் புருஷன்
இந்த முழு இயற்கையும் ஏன் கடவுள் படைத்தார் என்றால் அதை இந்த புருஷன் உணரட்டும் என்பதற்காகவே
மனிதப்படைப்பு அவ்வளவு முக்கியமானது அவனுக்காகவே கடவுள் சகலவற்றையும் படைத்தார்
கடவுள் மனிதனை தன சாயலிலேயே படைத்தார் சகலவற்றையும் அவனுக்கு கீழ்ப்படுத்தினார்

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக என்றொரு திரைப்பட பாடலை கேட்டிருப்பீர்கள் அது உண்மை


இயேசுவுக்கு
1000 ஆண்டுகளுக்கு முந்தய தாத்தன் யூதர்களுக்கு முதல்முதலில் தனி ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த அரசன் டேவிட் என்பவர் நல்ல பக்தன் ஆட்டிடையனாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு (ஆயர் குலத்தான் ) எப்போதும் கடவுளைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்ததால் அவனை ராஜாவாக கடவுள் உயர்த்தினார்
அவரின் பாடல் ஒன்றை பாருங்கள் :

சங்கீதம் :
8
3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5. நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
6. உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
7. ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
8. ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

இந்த முழுப்படைப்பும் அதை ஜீவாத்மாக்களாக இருக்கும் மனிதன் உணரட்டும் என்பதற்காக மட்டுமே


அவன் ஆற்றலால் தேவதூதரிலும் சற்றே சிறியவன் ஆனால் கடவுளின் சகல மகிமையாலும் முடி சூட்டப்பட்டவன்


இப்படிப்பட்ட மனிதர்கள் பல பிறவிகளாக பல படித்தரங்களில் இந்த பிரபஞ்சத்தை
உணர்கிறவர்களாக ஜீவாத்மாக்களாக இருக்கிறார்கள் .பல்லாயிரம் ஜீவாத்மாக்கள் சகலத்தையும் தன்னுள் அடக்கிய பரமாத்மா ஒன்று உள்ளது அந்த பரமாத்மாவே முழுமையானது பரமபுருஷன் ! நாம் அதன் பின்னமான ஜீவாத்மா

இதுவே ஞானத்திற்கு அடிப்படையான ஆத்மபோதம் !!


சகலமும் பிரக்ருதி என்றால் அதை உணர்கிற ஒன்று
உணர்வுகளின் தொகுதி ஆத்மா ஜீவாத்மா . அந்த ஜீவாத்மாக்களின் தொகுதி பரமாத்மா !!

பிரக்ருதி என்பதில் ஜட இயற்கையும் இந்த முழு ஜட இயற்கையையும் மையமாக
இருந்து உணர்ந்துகொண்டிருக்கும் அல்லது நிர்வகிக்கும் இதயம் போன்றது பரமாத்மா அதாவது பரமபுருஷன்

இந்த புருஷனையே ஆதி இந்து தர்மம் நாராயணன் என்கிறது

அவர் ஜட இயற்கை அதனால்தான் பள்ளிகொண்டிருப்பவராக தூங்கிகொண்டிருப்பவராக ஆனாலும் உணர்ந்து நிர்வகித்துக்கொண்டிருப்பவராக அறிதுயில் கொள்கிறான் நாராயணன் என்றார்கள் புரிய வைக்க ஒரு வடிவத்தையும் போட்டார்கள்

அவரே பரம்பொருள்
பரமாத்மா பரமபுருஷ பகவான் .

பகவான் என்றதும் அதை கடவுளாக கற்பித்துக்கொண்டோம் . பகவான்
; கர்த்தர் ; ஆண்டவர் என்பதெல்லாம் இறைவனுக்கு இணையான உயர்ந்த அந்தஸ்த்தை குறிக்கும் மரியாதையான விளிப்பு சொற்களே !

இதில் குழப்பமடைவதற்கு ஒன்றுமில்லை !
பிரக்ருதி இயற்கை என்பது படைக்கப்பட்ட பெளதீகம் என்றால் அதன் இயக்கு மையமான புருஷனும் படைக்கப்பட்டவரே !

முழு பிரபஞ்சமும் நாளுக்கு நாள்
விரிவடைந்து கொண்டே போகிறது என விஞ்ஞானம் சொல்லுகிறது . அந்த பிரபஞ்சம் எவ்வளவுதான் விரிவடைந்தாலும் அதற்கும் வெளியே பல மடங்கு வெட்டவெளியே உள்ளது . அந்த வெட்டவெளியிலே ஈதர் என்ற ஆவி உயிர் நிறைந்திருக்கிறது

அந்த வெட்டவெளி நாளும் பெளதீகமாக
பொருளாக மாறிக்கொண்டுள்ளது அதாவது அருவம் எல்லையில்லாது இருக்கிறது . அந்த அருவம் ரூபமாக மாறிக்கொண்டுள்ளது . சரியாக சொன்னால் அருவமும் உருவமும் கலந்த பிரபஞ்சமாக மாறிக்கொண்டுள்ளது அருபஉருவம் என்றொரு நிலை .

நாராயணன் என்ற புருஷன் அருபரூபியே !
நாரயணனிலிருந்து தோன்றிய தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்ற விண்ணுலகு சக்திகள் அனைத்தும் அருபரூபிகளே ! ஏன் மனிதனுக்குள்ளிருக்கும் ஜீவாத்மாவும் அருபரூபியே !!

அத்வைதத்தில் எல்லோருக்குள்ளும் எதிலும் ஒரே ஆத்மா மட்டுமே உள்ளது என்பார்கள் அந்த பரமாத்மாவே புருஷன் !!


தத்வமஸி
அது நீயாக இருக்கிறாய் !!

மகாகுரு ஐயப்பன் சந்நிதானத்தில் இந்த வாசகத்தை வைத்திருக்கிறார்கள்

யோக நிலையில் லயித்து பிரம்மத்துடன் இரண்டற கலந்து இருக்கும்போது அது பரமாத்மா நீயாக வெளிப்படும் !!

ஆனால் நானே அதுவல்ல என்பது மறக்ககூடாத உண்மை பரமாத்மாதான் ஜீவாத்மாவாக
இருக்கிறது ஆனாலும் பரமாத்மா முழுமையான ஞானமுள்ளது ; ஜீவாத்மாவோ ஞானத்தில் முழுமையில்லாமல் வளர்ந்து கொண்டிருப்பது . அறியாமையால் நிறைந்தது

அத்வைதவாதிகளுக்கு பெரும் ஆபத்து என்னவென்றால் நானும் அதுவும் வேறல்ல
; ஒன்று என்பதை நானே அது ; நானே கடவுள் என்பதாக ஒரு அகம்பாவத்தில் போய் முடிகிறார்கள்

அது நானாக இருக்கிறேனே தவிர நான் அதுவல்ல .


அதுபோல அருபமான
ஆவியான கடவுள் பரமாத்வாவாக வெளிப்பட்டிருக்கிறார் . கடவுளிடமிருந்து வெளிப்பட்ட அனைத்தும் நாராயணன் .( நரல் + ஆயணன் = சத்தமாக வெளிப்பட்டவன்) அருவமான கடவுள் பேசியவுடன் சகலமும் உண்டாயிற்று . அவரது சத்தமே நாராயணனாக பரமாத்மாவாக பிரபஞ்சமாக வெளிப்பட்டது
கடவுளே நாராயணனாக வெளிப்பட்டிருக்கிறார் ஆனால் நாராயணனே கடவுளல்ல ; அவருக்கும் வெளியே வெளிப்படாதவைகளாகவும் கடவுள் இருக்கிறார்

ஆபிரகாமிய வேதங்களில் கடவுள் வெளிப்படுத்திய உண்மை இதுவே ! சகல மதங்களின்
வேதங்களும் கடவுளிடமிருந்து பகுதி பகுதியாக வெளியாக்கப்பட்டவை ஆதலால் வேற்றுமை போல தோன்றினாலும் சமரச வேதம் வெளியரங்கமாகும் காலம் கனிந்து வருகிறபடியால் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது .

பிரக்ருதியும் அதன்
இயக்கமான புருஷனும் பரமபுருஷ பகவானும் படைக்கப்பட்டவர்களே . ஆனால் கடவுளின் மொத்த வெளிப்பாடு என்பதால் கடவுளுக்கு இணையானவர் நாராயண் சற்குரு !!

அப்படியானால் கீதையில் ஆங்காங்கு சகலமும் நானே என்று
கிரிஸ்ணர் சொல்கிறாரே அது சகல படைப்புகளும் நானே என்ற அர்த்தத்திலேயே என்பதை தெளிந்துகொள்ளவேண்டும்

நாராயணனின் அவதாரமான இயேசு சொல்வதை கவனியுங்கள் :


மத்தேயு
11:27 சகலமும் என் பிதாவினால் (கடவுளால்) எனக்கு (நாராயணனுக்கு) ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது . நானும் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறேனோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

யோவான்
14:6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


ஓம் நமோ நாராயணாய !!

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் !!

2) களம் மற்றும் துய்த்து அறிகிறவன் :

யுகபுருஷன் ஸ்ரீகிரிஸ்ணர்
கூறினார் : களம் என்பது மனித சரீரம் . அதன் துய்ப்பாளன் அதில் உறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவாத்மா .
மனிதனின் மனம் இருக்கிறதே அது ஓயாது அலை பாய்ந்து கொண்டே இருப்பது . அதிலிருந்து எண்ண அலைகள் அதிர்வுகளாக புறப்பட்டுக்கொண்டே இருக்கும் . அதை மனிதன் சிந்திப்பதில்லை . அணிச்சை செயலாக அது சிந்தனையை நடத்திக்கொண்டே இருக்கும்
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டா என்பது சித்தர் வரிகள் . ஓயாது தன்னிச்சையாக எண்ணிக்கொண்டே இருப்பதால் மனிதன் உணவு உண்பதால் உருவாகும் சக்தியில் பெரும் பகுதி இந்த சிந்தனைக்கே செலவாகிவிடுகின்றது

மருத்துவர்கள் எந்த
வியாதிக்கும் முதலில் சொல்லும் மருந்து நன்றாக தூங்கு என்பதாக இருக்கும் . அல்லது லேசான தூக்க மாத்திரையும் கொடுப்பார்கள் . அது எண்ண ஓட்டத்தை நிறுத்தினாலே உடலில் நிறைய சக்தி நோய் எதிர்ப்பு சக்தியாக மாறி வியாதி போய் விடும் .
பெரிய அறிவாளிகள் முதல் ரெம்ப சாதாரணமானவர்களும் எண்ணிக்கொண்டே தான் உள்ளனர் . சிந்தனை என்பதை தமிழ் எவ்வளவு அழகாக எண்ணம் என்று சொல்கிறது பாருங்கள் . ஒருவகையில் அது கணிப்பு .

மனமானது தான்
இருக்கும் இடத்தில் தன்னைசுற்றிலும் என்ன உள்ளதோ அதனோடு இடைபட்டு அது தொடர்பாக கணிப்புகளை வெளிப்படுத்த தொடங்கி விடுகிறது

தேர்தல்
எண்ணிக்கை நாளை நடக்கிறது என்றால் அதுவரை பொறுத்திருந்து பார்த்து விடுவதுதானே . அதற்குள் இப்படி அப்படி கணிப்பு அதைப்பற்றி ஆதரிப்பது எதிர்ப்பது அலட்டுவது வீராவேசம் கோபம் கொந்தளிப்பு சவடால் அடிதடி இதெல்லாம் எதற்கு ?

அதுதான் மனித மனம் . அது கருத்து
கந்தசாமி . வண்டியில் சென்று கொண்டிருப்போம் . இப்ப பார்த்த ஒன்றைப்பற்றி கருத்து சொல்லிக்கொண்டிருக்கும்போதே அடுத்த ஒன்றை பார்த்தவுடன் அதைப்பற்றி சொல்ல ஆரம்பித்துவிடும் . நமக்கு ரெம்ப பரிச்சியமாணவர்களின் கண்ணோ காதோ மூக்கோ உள்ள நபர்கள் யாராவது தட்டுப்பட்டால் இன்னது என புரியாமல் அங்கு போய் சிக்கிக்கொண்டு தடுமாறும் .. இதை ஏன் சொல்கிறேனென்றால் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒன்று பழகிய ஒன்று அறிந்த ஒன்று உணர்ந்த ஒன்று வெளியே இருந்தால் உடனடியாக அதில் நம் மனம் போய் லயித்து அதைப்பற்றி தடுமாற தொடங்கி விடும் அதை மேலும் புரிந்து கொள்ள பகீரத பிரயத்தனம் செய்யும் . இதுவே ஆர்வம் .
உள்ளே இல்லாத எதுவும் நமது ஆர்வத்தை தூண்டாது . ஆனால் நாம் பார்க்கிற கேட்கிற எதைப்பற்றியும் கொஞ்சமாவது நமது உள்ளே போய் பதிவாகி விடும் .வாசனை என்பார்கள் . அவ்வாறு பதிய பதிய உள்ளே அது வளர்ந்து பிறகு உள்ளிருந்தும் வெளியே வரத்தொடங்கி விடும் .
எங்கே போய் பதிகிறது ? எங்கே ஏற்கனவே இருந்ததை வைத்து இந்த மனம் சிந்திக்கிறது என்றால் அதுதான் ஆத்மா . சுருக்கமாக சொன்னால் நமது பல பிறவி எண்ணங்கள் அணுபவங்கள் ஞானம் அனைத்தும் ஒரு தொகுதியாக இருக்கிறதே அதுதான் ஆத்மா . அது உணர்வுகளின் தொகுதி .
ஒவ்வொரு உணர்வும் ஒரு அறிவாக மலரும் . உணர்தல் அறிந்ததால் அறிவகிகிறது . அது பழுத்த அணுபவத்துடன் நல்லது கெட்டது நெளிவு சுழிவு என பக்குவப்பட்டு தெளியும் போது ஞானம் .

ஒவ்வொரு உணர்வும் ஒரு
ஜடப்பொருளாகவும் கடவுள் படைத்துள்ளார் . ஒரு உயிரிணமாகவும் கடவுள் படைத்துள்ளார் . ஓரறிவு ஜீவனான தாவரங்கள் , மரங்களில் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி குணம் அல்லது தனிமத்தின் ரசாயணத்தன்மை இருக்கும் . ஒரு மூலிகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயணம் குணம் இருப்பதைக்கொண்டு வியாதிகளை குணப்படுத்துவதாலே சித்த வைத்தியம் என்றார்கள் . சித்தம் என்றாலும் எண்ணம் குணம் என்றே அர்த்தம் . வியாதிகளும் ஒரு குறிப்பிட்ட குணம் எண்ணத்தின் அடிப்படையானவை . அலோபதியில் அந்த குணம் உள்ள ரசாயனங்களை மருந்தாக கொடுக்கிறார்கள் .
ஆக இந்த முழு உலகமும் ஏன் பிரபஞ்சமும் உணர்வுகளின் தொகுதி என்பதை புரிந்து கொள்ளவேண்டும் . மனதை அறிந்து கொள்வது என்பது சகல ரகசியங்களையும் அறிந்து கொள்வது .

சகல உணர்வுகளும் ஐந்து
அறிவுகளின் கலப்பால் விளைகிறவை . சகலமும் பஞ்ச பூதங்கலாக ஜடமாக இருக்கும் அதேவேளை ஐந்து அறிவு உணர்வுகளுள்ள ஜீவன்களாகவும் இருக்கிறது .

அந்தந்த குணங்களை கொண்டு தாவரங்களும் விலங்கினங்களும் இயங்கிக்கொண்டே
இருக்கின்றன . ஆனால் அவைகளை உணர்ந்து எண்ணத்தை கொண்டு எண்ணத்தை விருத்தியாக்கி மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் ; துன்பமாகவும் கொடுமையாகவும் ; வாழ்த்தவும் சபிக்கவும் திட்டமிடவும் அழிக்கவும் சரிப்படுத்தவும் அடக்கவும் எதிர்க்கவும் ஆன செயல்லாக்கத்தை ஆறாவது அறிவு ஞானம் என்ற ஒன்றால் மனிதன் மாத்திரம் செய்கிறான் .

விலங்குகள்
இயல்பூக்கத்தில் வாழ்ந்து மடிந்து விடுகின்றன . நடந்தவைகளைப்பற்றி சிந்தித்து ஞானமடைவதில்லை. மகிழ்ச்சியடைவதில்லை ; வேதனைப்படுவதில்லை . ஆனால் மனிதன் துய்த்து அறிகிறான் . ஞானமடைகிறான் .

ஐந்து அறிவுடன்
ஆறாவது அறிவு சேரும்போது அந்த உணர்வுகளின் தொகுதி ஒரு தனித்த ; ஆழுமையுள்ள சுயத்தை அடைகிறது . அதுவே ஆத்மா தனித்ததும் விழிப்புள்ளதும் ஆழுமையுள்ளதுமான ஒரு சூக்கும சரீரம் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் உண்டு . அதனால்தான் மனித ஆத்மா ஜீவாத்மா எனப்படுகிறது .

எங்கும் நிறைந்த
பரமாத்மாவே எனக்குள்ளாக ஜீவாத்மாகவும் இருக்கிறது என அத்வைதம் சொல்கிறதே அதுவும் சரி . அது பாதி உண்மை . ஆனால் என் ஜீவாத்மா தனித்த ஆழுமையுள்ளதாகவும் தனித்த புருஷனாகவும் என்னைப்போல பல கோடி தனித்த ஜீவாத்மாக்கள் உள்ளன என்பதும் உண்மை . பல கோடி ஜீவாத்மாக்க்களை தனக்குள் அடக்கியதாக பரமாத்மா இருந்தாலும் அது இயற்கையாக பிரக்ருதியாக மட்டும் இல்லாமல் அதுவும் தனித்த இயல்புள்ள பரமபுருஷனாகவும் உள்ளது என்பதும் உண்மை . இதுதான் அத்வைதமும் துவைதமும் கலந்த விசிஸ்டாத்வைதம் என்பது

அத்வைதமும் சரிதான் துவைதமும் சரிதான் என்ற ஞானத்தை அடையும் வரை ஒரு சாதகன் ஞான நதியில் பயணிக்க தொடங்கவில்லை என்பதே எதார்த்தம்


அத்வைதம் ஒரு கரை என்றால் ஞானநதிக்கு துவைதம் ஒரு கரை . கரையிலேயே
நின்றுகொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்களேதவிர அந்த ஆற்றில் அவர்கள் குதிக்கவில்லை .


பரமாத்மாவைப்போலவே ஜீவாத்மாவும் தனித்தது
ஆழுமையுள்ளது ஆக்கவும் அழிக்கவும் கூடியது . நல்லது கெட்டது செய்து புண்ணியத்தையும் பாவத்தையும் சம்பாதிப்பது .ஆனால் பரமாத்மாவோ எந்த பாவ புண்ணியத்தாலும் கறைபடியாமல் கடந்த நிலையில் இருப்பது .
பராமாத்மா முழுமையான ஞானத்தால் நிரம்பியது என்றால் ஜீவாத்மா அரைகுறை ஞானத்தால் தத்தளிப்பது . பாவபுண்ணியங்கள் செய்து பல பிறவிகளாக அடிஉதை பட்டு பக்குவப்பட்டு ஞானத்தில் முழுமையை நோக்கி முன்னேறுவது . அந்த முழுமையே மரணமில்லா பெருவாழ்வு பெறுவது . அதுவரை பிறந்து இறந்து பிறந்து வாழ்கிறது . நாளும் நாளும் பிறவிகள் தோறும் துய்த்து அறிந்து ஒரு நாள் முழுமையடையும் . அந்த தகுதி மனிதனுக்கு மட்டுமே உள்ளது .

அதனால்தான் இங்கு
ஸ்ரீகிருஷ்ணர் ஷேத்திரம் களம் என்பது மனித சரீரம் . அதிலிருந்து துய்த்து அறிந்து முன்னேறுகிரவன் ஷேத்ரக்ஞன் ஜீவாத்மா என்கிறார் .

சரி ! முதலாம் ஷேத்ரக்ஞன் யார்
? அவரின் படைப்பின் ரகசியம் என்ன ?


இந்து தர்மம் ஒவ்வொரு யுகம் தொடங்கும்போதும் ஒரு மனு மூலமாக மனித இனம்
விருத்தியாகிறது என்கிறது . யுக முடிவில் மனித இனம் முழுவதும் அழிக்கப்பட்டு விடுகிறது .பின்பு மீண்டும் ஒரு மனு மூலமாக சிருஸ்டிக்கப்படுகிறது .

இப்போது நாம் நான்காவது யுகத்தில் இருக்கிறோம் .


முதலாவது யுகம்
கிருத யுகம் சிவன் யுகபுருஷன்

இரண்டாவது யுகம்
திரேதா யுகம் ராமர் - யுகபுருஷன்


மூன்றாவது யுகம்
துவாபர யுகம் கிரிஸ்ணர் யுகபுருஷன்


நான்காவது யுகம்
கலியுகம் இயேசு யுகபுருஷன்


இதில் முதல் மூன்று யுகபுருஷர்களும் வந்தது திராவிட இனத்தில்
அதாவது இந்தியாவில் .எனவே இந்தியர்களுக்கு அவர்களை தெரிகிறது . ஆனால் ஆப்ராகாம் சந்ததியினருக்கு அவர்களை தெரியவில்லை.

இன்றைக்கு உலகில் மற்றெல்லா
நாடுகளிலும் பரவியுள்ள ஆப்ராகாமிய வேதங்களான யூதம் ; கிறிஸ்த்தவம் ; இசுலாம் அனைத்தும் ஆப்ரகாம் என்ற இறை அடியவரின் வாரீசுகளிடத்திளிருந்து வந்த வேதம் . அதிலும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது . இவர்களுக்கு இயேசுவை தெரியும் ஆனால் சிவனையும் ராமரையும் கிரிஸ்ணரையும் தெரியாது .

இந்தியாவில் எப்படி நான்கு வேதங்கள் இருக்கின்றனவோ அதுபோல ஆப்ராகமியரிடத்தும் ஒரு வேதம் உள்ளது .


உலகில் வந்துள்ள இந்து ; யூத ; கிறிஸ்தவ ; இசுலாமிய வேதங்கள் எதுவுமே பொய்யல்ல . இட்டுக்கட்ட முடியாத அளவு ரகசியங்கள்
; இறைவனின் வெளிப்பாடுகள் உள்ளன . ஆனால் அவை வெளிவந்த மனித இனத்தின் கலாச்சாரம் ; சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு அவற்றிற்கு ஏற்ப இறைவனால் கொடுக்கப்பட்டவை .அது போல அப்போதைக்கு எது தேவையோ அது மட்டுமே வெளிப்படுத்தப்பட்டதால் எவையுமே முழுமையும் முடிவுமானவையுமல்ல .

ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ளதாக
; ஒரு இனத்தின் கலாச்சாரத்தை மற்றொரு இனத்தின் மீது திணித்து அதை அழிப்பதுபோல இப்போது இவைகள் இருந்தாலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டிருந்தாலும் சமரச வேதம் வெளியரங்கமாகும்போது இவை அனைத்துமே நேர்த்தியாக அதில் ஒற்றுமையாக்கப்படும் . அதை இறைவன் நிச்சயமாக செய்வார் .

அப்படியானால் ஞானம் பயில்வோர்
; வரப்போகிற சமரச வேதத்தின் வித்துகளான மனிதர்கள் எப்படி இவைகளை அணுகவேண்டும் என்றால் :

1)எவையுமே பொய்யல்ல 2)எவையுமே முழுமையுமல்ல 3) எவைகளிலும் மனித கலப்படங்கள் உள்ளன .

இறைவன் வெளிப்படுத்தியவைகளோடு மனிதர்கள் தங்கள் கற்பனைகளை கலந்து
விட்டிருக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தோடு மூன்று மதங்களிலும் உள்ள உண்மைகளை அவைகளிலுள்ள மனித கலப்படங்களை ஒதுக்கி இறைவனின் அருளினால் கிரகிக்க முனையவேண்டும் .

இன்னும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் மதம் மட்டுமே இறைவன் கொடுத்தது மற்றயவைகளை அழித்து விடுவோம் என மனிதர்கள் முயற்சித்தாலும் அது நடக்கப்போவதில்லை . என் மதத்தை காப்பதற்காக நான் மற்றயவைகளை வரிந்து கட்டிக்கொண்டு வெறுக்கிறேன் என்பது ஞானமல்ல . அதற்கு பதிலாக அவைகளை நம் மதத்திற்குள் இழுத்து விட்டால் மதச்சண்டைகள் ஓய்ந்து விடும் .

பிற மதங்களின் உண்மைகளை தனக்குள்ளாக
ஈர்த்துக்கொள்ள்ளும் தன்மை இந்து தர்மத்திற்கு மட்டுமே உள்ளது . ஏனென்றால் அதுவே தாய் மதம் . முதலாம் மனிதனின் தர்மம் . ஆப்ராகாமிய வேதங்களின் அடிப்படையான உருவமற்ற இறைவழிபாடு ஏற்கனவே இந்து தர்மத்தில் இருப்பதுதான் . அத்வைதமாகவும் ; சித்தர்களின் நெறியாகவும் ; ஆதி புத்த கொள்கையாகவும் (ஹீனயானம் புத்தர் கடவுளாக்கப்பட்டதற்கு முந்தய நெறி ) ; சமண மதமாகவும் சீக்கிய மதமாகவும் இந்துதர்மத்தில் அருப வழிபாடு இருந்துகொண்டுதான் உள்ளது .

சமரச வேதம் வெளியரங்கமாகும் காலம் நெருங்கி விட்டதாலேயே இறைவன் இவைகளை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார் .


மனித சிருஸ்டி பற்றி ஆப்ராகாமிய வேதங்களில் வெளிபடுத்தியுள்ளதை
பார்ப்போம் :

ஆதியாகமம்

1 : 26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
2 : 7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

நான் முன்பே சொன்னேன் ; பஞ்ச பூதங்கள் ஐந்து அறிவுடன் துய்த்தறிகிற ஆறாவது அறிவுமுள்ளவனாக மனிதன் படைக்கப்பட்டான் . அவன் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அவன் பெயர் மண்ணு அதாவது மனு என்றாயிற்று இந்துதர்மத்தில் மனு என்பதும் யூத பாஷையில் ஆதம் என்பதும் ஒன்று .

இன்னும் இந்நிகழ்வுகள் கடைசியாக வந்த குரானில் விரிவாக உள்ளது:

2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்எனக் கூறினான்.
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்என்றான்.
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்எனக் கூறினார்கள்.
2:33. “ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
2:34. பின்னர் நாம் தேவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் அசுரர்களின் பிதாவாகி விட்டான்.

பூமியும் பூமிக்கு மேல் உள்ள
ஆறு  வானங்கள் ( ஒவ்வொரு வானத்திற்கும் இரண்டு லோகம் உ.ம் பூமி ; பூமிக்கு ஒரு பாதாளம் போல ஈரேழு பதினாலு லோகங்கள் உள்ளதாக இந்து கணக்கு ) அனைத்தும் மனிதனுக்காக படைக்கப்பட்டது .

ஆனால் மனித படைப்பு தொடங்கும் முன்பே வானவர்கள்
அதாவது தேவர்கள் அல்லது தேவதூதர்கள் படைக்கப்பட்டு விட்டனர் .

நான் இன்னுமொரு விசயத்தை சொல்வேன் :


எப்படி ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு தாவரமோ அதே போல தேவர்கள் என்பவர்களும்
ஒரு குறிப்பிட்ட குணம் தன்மை உள்ளவர்களே . . முழுமையானவர்கள் அல்ல .முழுமையானவர் பரமபுருஷனான நாராயணன் மட்டுமே .

குரான் 15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
15:27. (அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.

பிரபஞ்சத்தை படைக்கும் முன்பாக
ஜின்களின் மூல பிதாவாகிய ஜானை நெருப்பிலிருந்து படைத்தோம் என்று குரான் சாட்சி சொல்கிறதே அவரே நாராயணன் . ஜான் என்றாலும் ராம் என்றாலும் ரோம் என்றாலும் குமாரன் – அதாவது பிரதிநிதி . கடவுளின் வெளிப்பாடானவர் – நாராயணன் – பரமாத்மா . கடவுள் சகலவற்றையும் இவர் மூலமாக படைத்தார் என்பதால் மூலபிதா என்ற வார்த்தையை குரான் பயன்படுத்தியிருக்கிறது .

கீதை
8:4 உடலுள்ளவைகளில் சிறந்தவனே ! பவ்தீகப்பொருட்கள் ஒன்று மற்றொன்றாய் வளர்சிதை மாற்றம் அடைந்துகொண்டே உள்ளன ! இது ஆற்றல் சுளர்ச்சி அல்லது ``ஆதிபுத்தா`` எனப்படும் ! இந்த வளர்சிதை மாற்றமே பொருட்களின் உருவாக்கமாக வெளிப்படுகின்றன ! கடவுளின் சர்வவியாபகமோ சகலத்தையும் உள்ளடக்கியது ! வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் !சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் !

குரான் 2 : 30 ல் பூமியில் கடவுளின் பிரதிநிதியாக மனிதனை படைக்கப்போகிறேன் என்று கடவுள் சொல்லியபோது ஏற்கனவே படைக்கப்பட்ட வானவர்கள் நாங்களோ சதா உம்மை சார்ந்து வாழ்பவர்கள் . ஆனால் மனிதன் சுயமடைந்து கலகம் செய்வான் என்றார்கள் . ஏனென்றால் மனிதன் தேவர்களைப்போல அல்லாமல் முழுமையானவனாக படைக்கப்படுகிறான் என்றார்கள் ..
அதுமட்டுமல்ல வானவர்களுக்கு தெரியாத தாவரங்கள் பொருட்கள் விலங்குகளின் பேரையெல்லாம் கடவுள் மனிதனுக்கு கற்றுக்கொடுத்தார்

அந்த முதாலம் மனிதன் மனு ஞானத்தில் தேவர்களை விட முன்னேறியவனாக இருந்தான் .

அதுமட்டுமல்ல தேவர்கள் அனைவரும் அந்த மனுவுக்கு பணிந்து வணக்கம் செய்து வேலை செய்யவேண்டும் என்றும் கடவுள் உத்தரவிட்டார் .

இப்போது பாருங்கள் . யார் ஆணாகவும் அவரில் பாதியான பெண்ணாகவும் இருந்தது ? யாருக்கு தேவகணங்கள் எப்போதும் பணிவிடை செய்தார்கள் ? இவை அனைத்தும் சிவனுக்கு பொருந்தவில்லையா ?

அந்த முதல் மனிதன் கடவுளுக்கு
இணையானவன் . கடவுளால் படைக்கப்பட்ட சகலத்தையும் ஆண்டுகொள்ளவும் ; தேவர்களும் பணிவிடை செய்யும் படியாக கடவுள் சித்தம் செய்தவர் .

5. நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
6. உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
கடவுளால் படைக்கப்பட்ட சகலவற்றையும் தேவர்கள் உட்பட சிவனுக்கு கடவுள் கீழ்படுத்தினார் .

ஆனால் படைக்கப்பட்டவைகளைத்தான் கீழ்ப்படுத்தினாரே ஒழிய படைத்தவர் அவருக்கு கீழாகவில்லை . இந்த உண்மையைத்தான் நாம் மறந்துபோகிறோம் .

கடவுளும் கீழாகவில்லை .சகலத்தையும் யார் மூலமாக படைத்தாரோ அந்த பரம புருஷனும் கீழாகவில்லை .


அந்த பரமபுருஷன் அருப உருபி என்றால் சிவன் ரூபி . சரீரம் .
நாராயணன் ஆத்மா என்றால் சிவன் சரீரம் .

இந்து தர்மத்தில் நரநாராயனர்களாக அவதாரம் செய்ததாக புராணம் உண்டு .

கிருத யுகம் சிவனால் ஆளுமை செய்யப்பட்டது . சத்தியம் நிலைத்திருந்தது . பூமியில் மனுக்குலம் அவர் ஆளுமையில் செழித்து வளர்ந்தது .

அவர் சதா நாராயணனை குருவாக வைத்து கடவுளை தியானித்தவராக இருந்தார் .


குரு கீதை (
2) !!
யுகபுருஷன் சிவன் பார்வதிக்கு உபதேசித்ததாவது :

1 . மகாதேவி ! சகல ஆனந்தத்தை அளிப்பதும் ; சகல சுகங்களை அருளுவதும் ; தூய அறிவையும் முக்தியையும் அளிப்பதுமான தியானத்தைப்பற்றி கூறுகிறேன் கேள் !

2 . பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனை உணர்ந்து கொள்வாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனைப்பற்றியே பேசுவாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனையே சேவிப்பாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனையே நமஸ்கரிப்பாயாக !!

3 . பிரம்மானந்தத்தையும் பரம சுகத்தையும் அடைய வழிகாட்டியும் ; ஞானமே வடிவானவரும் ; மயக்கும் இருமைகளின் ஆளுமைக்குள்ளாகாதவரும் ; ஆகாயம் போன்ற பரிசுத்தரும் ; ````தத்- த்வ மஸி என்ற இலக்கை காட்டிக்கொடுக்கிரவரும் ; தனித்தவரும் ; அழிவற்றவரும் ; நிர்க்குணமானவரும் ; கலங்கமற்றவரும் ; எல்லோருடைய ஆத்மாவுக்கும் சாட்சியானவரும் ; கற்பனைகளுக்கெட்டாதவரும் ; ஜட இயல்பாகிய முக்குணங்களை கடந்தவரும் குருவிற்கெல்லாம் குருவாகியவரும் ஆன சற்குருவையே நமஸ்கரிக்கிறேன் !!

4 . சந்திரகலை போலப்பிரகாசிப்பவரும் ; சச்சிதானந்த அபீஸ்ட்டா வரத்தை அளிக்க வல்லவருமான குருவின் திவ்ய மூர்த்தியை இருதயத்தாமரை கர்னிகத்தின் மத்தியிலே சிம்மாசனத்தில் வீற்றுக்கச்செய்து தியானித்து வரவேண்டும் !!

5 . தூய (வெண்மையான) ஆடையுடுத்தவரும் ; தூய வடிவுடையவரும் புஷ்பமும் முத்துமாலையும் அணிந்தவரும் ; மகிழ்சி ததும்பும் இரு விழிகளுடன் இடது மடியில் லக்ஷ்மியை ஏந்தியவரும் ; பரிபூர்ண கிருபைக்கு உறைவிடமும் ஆன (நாராயணனை) குருவை தியானித்து வரவேண்டும் !!
அவர் இந்த குருகீதையை மனித குலம் உய்ய உன் பிள்ளைகள் செய்யவேண்டியது என்ன என பார்வதிக்கு உபதேசித்தார் . பின்பு சனகாதி முனிவர்களுக்கு பட்டமங்கலத்தில் வைத்து உபதேசித்தார்
(சிவனாரே ஆதி சித்தர் தமிழரும் கூட . ஆதி உபதேசங்கள் வேதங்கள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன .பின்னாளில் சகலரும் புரிந்து கொள்ளட்டும் என சமப்படுத்திய பாஷையான சமஸ்கிரதத்தில் மொழி பெயர்த்தார்கள்)

சிவன் அடிப்படையில் ஜீவாத்மா .
ஆனால் சரீரத்தில் இருந்தார் . அதை சிறப்பாக வழி நடத்தினார் . அதனால்தான் அவரை நந்தி வாகணன் என்றார்கள் . அந்த நந்தி மனித சரீரமே . ஆத்மா அதன் மீதேறி பயணம் செய்கிறது . அதில் நல்ல விசயங்களை வாசனைகளை மட்டும் சேர்க்கவேண்டும் என்பதை அடையாளப்படுத்தவே பிரதோஷம் அன்று அந்த நந்திக்கு பல உயர்ந்த பொருட்களால் அபிசேகம் செய்கிறார்கள் . அதுபோல நமது சரீரத்தை கோவிலுக்கும் சத்சங்கங்களுக்கும் கொண்டு சென்று நல்ல விசயங்களை அதில் உற்ற வேண்டும் .

அந்த முதலாவது ஷேத்ரக்ஞன்
நந்தி வாகணன் சிவன் தன் வாழ்வில் முழுமையடைந்து ஒளி சரீரம் பெற்று தேவனாக ருத்திரனாக – பைரவராக வைகுண்டம் சென்றார் .


இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும் . பரமாத்மா முழுமையானவர் . தேவர்கள் முழுமையானவர்களல்ல . ஆனால் அங்கு சென்ற சிவன் முழுமையானவர் . எப்படி நாராயணன் முழுமையானவரோ அவரில் படைக்கப்பட்டவைகளில் சிவன் ருத்திரனாக முழுமையானவராக அங்கு இருக்கும் தகுதி பெற்றார் . மரணமில்லா பெருவாழ்வு ஒளி சரீரம் பெற்று அங்கு செலும் தகுதி பெரும் மனிதர்கள் அனைவரும் அங்கு நாராயனனைப்போலவே முழுமையானவர்களாக தேவர்களைக்காட்டிலும் தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள் .

அதுதான் மனிதப்பிறவியின் மாண்பு .
ஷேத்ரக்ஞனாக சகலத்தையும் அறிந்து உணரும் வாழ்வில் முழுமையடைந்தால் மெய் ஞானத்தில் முழுமையடைந்தால் வள்ளலாரைப்போல பலரும் ஒளி சரீரம் பெற்று பரலோகம் செல்லமுடியும் .

இந்த பரலோக வாழ்வையே ஆப்ராகமிய வேதங்களில் மறுமை
என்றார்கள் . ஆனால் அடையாளமாக சொல்லப்பட்டதை ஒரே ஒரு பிறவியிலேயே சடங்கு போல வழிபட்டால் பரலோகம் போய் விடலாம் என குழந்தைத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் . அது மட்டுமல்ல ஒரே ஒரு பிறவி முடிந்ததும் நியாயத்தீர்ப்பு நாள் வரை – அதாவது யுக முடிவு நாள் வரை மனித ஆத்மா மண்ணுக்குள் நித்திரையில் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் .

உதாரணமாக மாபெரும் இறை தூதராக அவர்கள் சொல்லும் முகமது நபி இறந்து இன்னும் பூமியில் கல்லறையிலேயே நியாயத்தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் . 70 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த முகமது நபி 1600 ஆண்டுகளுக்கு மேலாக மண்ணுக்குள் காத்திருக்கிறார் என்பது தண்டனை இல்லையா  இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ ? அளவற்ற அருளாளன் இப்படியா கொடுமைப்படுத்துவார் என்று சிந்தித்தால் ஆப்ராகாமிய வேதங்கள் ஒரு அடையாளமே தவிர முழுமையானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளமுடியும் . பல பிறவிகளாக பிறந்து ஞானத்தில் படிப்படியே முன்னேறி ஒரு நாள் சிவனைப்போல ; சப்தரிஷிகளைப்போல இந்தியாவின் பல ஞானிகளைப்போல ; மோசேயைப்போல ; எலிஜாவைப்போல ; இயேசுவைப்போல ; வள்ளலாரைப்போல ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வுக்குள் – பரலோகத்தில் பிரவேசிக்க வேண்டும் என்பதே அளவற்ற அருளாளன் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்திருக்கும் வாக்கு என்பதை புரிந்துகொள்ள முடியும் .   


கடவுளுக்கு இணை வைக்காதீர்கள் என்பது சிவனின் வாரிசுகளாக வந்த
மனிதர்களுக்குத்தானே தவிர சிவனை ஆதமை கடவுள் தனக்கு இணையனவராகாவே தேவதூதர்களும் பணியும் படியாக கடவுளே கட்டளையிட்டார் என்று குர்ஆனில் உள்ளது .

மனிதர்களுக்கு சிவன் குரு வழிபாட்டுக்கு உரியவர்  
மனித சரீரங்கள் அனைத்திற்கும் சிவனே சற்குரு . சிவனின் மூலமாக கடவுளை வழிபடுவதே ஏற்புடையது . கடவுளுக்கும் பிரியமானதும் கூட.

ஓரிறைவனையே துதிக்கிறோம்

சிவனின் நாமத்தினாலே
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 


கீதை 13 : 4 சரீரத்தின் தன்மை என்ன ? அதிலிருந்து விகாரங்கள் எவ்வாறு உண்டாகிறது ? அதை உணர்ந்தறிகிறவன் யார் ? அவனுக்கு அதன் மீதுள்ள ஆளுமை என்ன ? என்பதைப்பற்றி உரைக்கிறேன் கேட்பாயாக !

கீதை
13 : 5 செயல்களின் களமான சரீரம் ; மற்றும் செயல்களை அறிந்துணர்கிறவனாகிய ஆத்மாவைப்பற்றிய அறிவு ; அறிவிற்சிறந்த முனிவர்களால் பற்பல வழிகளில் பல்வேறு மந்திரங்களில் உபதேசிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக வெளிப்படுத்தப்பட்ட இறை வேதங்களில் (ரிக் , யஜுர் , சாம , அதர்வண , தவ்ராத் , இன்ஜீல் மற்றும் குரான்) இவை நுணுக்கமாக காரணம் மற்றும் காரியங்களுடன் விளக்கப்பட்டுள்ளன .

கீதை
13 : 6 & 7 மகா (பஞ்ச) பூதங்கள் ; அவற்றின் சுயம் மற்றும் புலப்படாத குணங்களும் ;அவற்றால் உண்டான பஞ்சேந்திரியங்களும் (கண் ,காது , மூக்கு , நாக்கு & தோல்)அவற்றின் ஐந்து கோசாரங்களும் (குரல் , கால்கள் , கைகள் , ஆசனவாய் மற்றும் பாலுறுப்பு) அவற்றுடன் புலப்படாத மனமும் ஆக பதினொன்று இவைகளுடன் கூடியவை சரீரமாகும் ; இவற்றால் உண்டாகும் விருப்பு , வெறுப்பு , இன்பம் , துன்பம் ஆகிய பாதிப்புகள் மற்றும் அவை தொடர்பால் எழும்பும் சுயமுயற்சியும் சரீரத்தின் விகாரங்கள் எனப்படுகின்றன .

3 .ஞானம் மற்றும் நேயம்

கீதை
13 : 8 அடக்கம் , அத்துமீறாதிருத்தல் , சாத்வீகம் , சமாதானம் , எளிமை , குருவை அடுத்திருந்து கற்றுக்கொண்டே இருத்தல் , தூய்மை , தளராமை , ஆத்ம விழிப்பு

கீதை
13 : 9 ஐம்புலன்களையும் அடக்குதலில் தளராமை , சுயத்தை கடரும் மனநிலை இவைகளுடன் பிறப்பு , இறப்பு , முதுமை , நோய் , துன்பம் , களங்கம் ஆகியவைகளில் சாட்சியாக மட்டும் இருந்து கொண்டு

கீதை
13 : 1 பற்றுதலின்றி பட்டும்படாமல் குழந்தைகள் , மனைவி மற்றும் இதர பந்தங்களில் விடுபட்டு இருத்தல் ; விருப்பு வெறுப்புகளில் சமநிலை அடைதல் ;

கீதை
13 : 11 சதா ஆழ்ந்த யோகத்தில் நிலைக்க என்னை சரணடைந்த குருபக்தியும் ; தனித்தும் விழித்தும் ஜனத்திரளின் புகழில் பற்றின்றியும்

கீதை
13 : 12 ஆத்மாவில் விளையும் நித்தியானத்த போதத்தில் திளைத்தும் ; தத்துவ விசாரத்தில் தெளியும் தரிசனத்தை அடையும் இலக்கில் செயல்பாடும் ஆகிய இவையே ஞானமடைதல் என்கிறேன் ; இதிலிருந்து வேறுபட்டவை எல்லாம் மாயையே ஆகும் .

கீதை
13 : 13 மேலும் எதை அறிவதால் அமிர்தத்தை சுவைப்பாயோ அந்த தெய்வீக அன்பை (நேயம்) இப்போது விளக்குகிறேன் . அது பரப்பிரம்மம் ஆதிமூலம் - கடவுள் . ஆரம்பம் இல்லாததும் எனக்கு கீழ்படாததும் இந்த ஜட இயற்கையின் (பிரக்ருதியின்) காரணம் (அடிப்படை- சத்) ; மற்றும் விளைவுகளுக்கும் (வெளிப்பாடுகள் அசத்) அப்பாற்பட்டும் பாதிப்பிலாமலும் இருக்கின்றது .

கீதை
13 : 14 எங்கும் அவரது கரங்களும் ; கால்களும் ; கண்களும் ; காதுகளும் ; முகங்களும் இருந்தாலும் இவ்வுலகத்தில் இல்லாதவரைப்போல திரையிட்டு எங்கும் விளங்குகின்றார் .

கீதை
13 : 15 சகல இந்திரியங்களின் குணாதிசயங்களுக்கும் மூலமாக அவரே இருந்தாலும் இந்திரியங்களிளிருந்து உருவாகும் விகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் . அனைத்தையும் அவரே பராமரிப்பவர் ஆனாலும் அவைகளால் பந்தப்படாதவர் . ஜட இயற்கையின் குணங்களுக்கும் அவரே எஜமானர் ஆனாலும் அவைகளால் பாதிப்படையாதவர் .

கீதை
13 : 16 படைப்பினங்கள் அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளவர் . மேலும் அசைவன மற்றும் அசையாதனவற்றிலும் உள்ளவர் . புலன்களால் காணவோ அறியவோ முடியாத அருபமானவர் ஆனாலும் உணரக்கூடிய தெய்வீக அன்பால் நிறைந்தவர் . வெகுதூரத்தில் இருப்பவர் போல இருந்தாலும் நெருக்கமாகவே உங்களுக்குள்ளேயே இருப்பவர் .

I
யோவான் 4 :
தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.  அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் – வள்ளலார் . ஆன்மநேய ஒருமைப்பாடு நித்திய ஜீவர்களின் அடையாளமாகும் .ஒருவன் தன்னிலே வாசமாயிருந்து தன்னை அழிய விடாமல் காக்கும் உயிரின் அன்பை உணர்ந்து கொள்வானானால் ; அதே உயிர் வாசமாயிருக்கும் சகல உயிரினங்களின் மீதும் அபிமானம் பெருகுவதை தடுக்கவே முடியாது .


கீதை
13 : 17 படைப்பினங்கள் அனைத்திலும் பிரிந்து அவைகளுக்குள் நிலைபெற்று இருப்பதுபோல் இருந்தாலும் அவர் பிரிவின்றி எங்கும் நிலைத்திருப்பவர் . படைப்பினங்கள் அனைத்திலும் உயிராக இருந்து காப்பவர் என்றாலும் அவற்றை அழிப்பவரும் விருத்தி செய்பவரும் அவரே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .

கீதை
13 : 18 பிராகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றின் ஒளியாக இருந்தாலும் மாயையின் இருளால் உணரமுடியாதவராகவும் இருக்கிறார் . ஞானத்தாலும் ஞானத்தின் விருத்தியாலும் உணரப்படவேண்டிய தெய்வீக அன்பாக சகலரின் இதயத்திலும் அவர் வீற்றிருக்கிறார் .

கீதை
13 : 19 இவ்வாறாக பிரபஞ்சம் ; பரமாத்மா ; சேத்ரம் (சரீரம் செயல்களின் களம்) சேத்ரக்ஞன் ; ஞானம் ; தெய்வீக அன்பு ஆகியவை சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது . இவற்றை புரிந்து கொண்ட எனது சீடன் என்னைப்போலவே பாவனை அடைகிறான்

கீதை
13 : 2௦ பிரக்ருதியும் அதன் மையமான பரமபுருஷனும் நித்தியமானவை என்பதை அறிந்துகொள் . ஜட இயற்கையின் முக்குணங்களும் அவற்றிலிருந்து எழும்பும் விகாரங்களும் பிரக்ருதியால் உற்பத்தி செய்யப்படுபவை அநித்தியமானவை என்பதையும் அறிந்துகொள் .
கீதை 13 : 21 படைப்புகளின் விசயத்தில் எல்லா செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் பிரக்ருதியே காரணமாகும் . அதுபோல அதனால் விளையும் இன்ப துன்பங்களை அனுபவித்து உணர்வது புருஷனே ஆத்மாவே ஆகும் .

கீதை
13 : 22 ஆத்மா சரீரத்தின் ஜட இயற்கையில் நிலைபெற்று ஜட இயற்கையின் முக்குணங்களையும் அவற்றின் சங்கமத்தால் எழும்பும் பல்வேறு விகாரங்களையும் அனுபவித்து நன்மை தீமைகளை செய்கிறது . அதற்கேற்ற கர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் ஜனித்து வாழ்வை தொடர்கிறது .
கீதை 13 : 23 இருப்பினும் அந்த சரீரத்தில் பரமாத்மாவோடு தெய்வீகமான மற்றொருவரும் இருக்கிறார் . அவரே பரம உரிமையாளர் ; தலைவர் ; மேற்பார்வை செய்பவர் ; அனுமதிக்கிறவர் ; முற்றுயிராய் பரத்தில் நிறைந்த இறைவன் அவரே .

கீதை
13 : 24 (பிண்டத்தில்) உயிர் ; ஆத்மா ; சரீரம் (அதுபோல அண்டத்தில் கடவுள் ; பரமாத்மா ; பிரக்ருதி ) இவற்றோடு ஜட இயற்கையின் முக்குணங்களின் வர்த்தமானங்களால் உருவாகும் செயல்பாடுகள் மற்றும் இவைகளுக்கிடையான உறவுகளை செம்மையாக புரிந்துகொள்பவன் யாரோ அவன் நித்திய ஜீவனை மரணமில்லா பெரு வாழ்வை நிச்சயம் அடைவான் .

கீதை
13 : 25 தியானத்தினால் தன்னை ஆத்மாவாக (ஜீவாத்மாவாவாக) உணர்ந்து அந்த ஆத்மாவின் மூலமாக பரமாத்மாவை கண்டுணரலாம் . மேலும் தத்வ விசாரத்தாலும் யோக அப்பியாசத்தாலும் கர்ம யோகத்தாலும் பரமாத்மாவை உணரலாம் .

கீதை
13 : 26 வேறு சிலர் ஆன்மீக ஞானத்தில் ஆழ்ந்த பயிற்சி இல்லாத போதிலும் ; அத்தகையோரின் (உபகுருக்கள்) உபதேசங்களை கேட்டதில் ஆர்வமுற்று பின்பற்றுவதால் மரணத்தின் வழியை கடக்கும் - நித்தியஜீவனுக்கான பாதையில் பயணிக்க தொடங்குகின்றனர் .

கீதை
13 : 27 பரதவர்களின் தலைவனே ! ஏதேனும் அசைவற்று இருக்கின்றதோ அல்லது எதுவெல்லாம் அசைவுற்று மாறிக்கொண்டே இருக்கின்றதோ அவையெல்லாம் ஷேத்ரம் (சரீரம்) மற்றும் ஷேத்ரக்ஞன் (ஆத்மா) இவைகளுக்கிடையிலான இயக்கங்களால் வெளிப்படுபவை என்பதை அறிந்து கொள்வாயாக .

கீதை
13 : 28 எல்லா உயிரினங்களிலும் ஆதி மூலமான கடவுள் (உயிராக) வசிப்பதை எவனொருவன் காண்கிறானோ அழிவுறும் சரீரத்தில் அழிவற்ற உயிரும் பரமாத்மாவும் வசிப்பதை யாரொருவன் காண்கிறானோ அவனே உண்மையை உணர்கிறவன் .

கீதை
13 : 29 எல்லா உயிரினங்களிலும் சமமாக வசிக்கும் (உயிராகிய) கடவுளையும் ; பரமாத்மாவே சமமாக எங்கும் ஜீவாத்மாவாக வசிப்பதையும் உணர்கிறவன் எதையும் இழிவுபடுத்துவதில்லை .இதனால் அவன் தெய்வீகத்தன்மையை அடைகிறான் .

I
யோவான் 4 :
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனிடத்து அன்பு கூராதவன் ஒரு  பொய்யன்; தான் கண்ணில் கண்ட மனிதனிடத்தில் அன்புகூராதவன், தான் கண்ணில் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

கீதை
13 : 30 எவனொருவன் ஜட இயற்கையே (சரீரமே) சகல செயல்களையும் ஊக்கப்படுத்தி செய்விக்கிறது ; ஆத்மா அத்தேவைகளுக்கு அப்பாற்பட்டது என்ற பக்குவத்தை அடைகிறானோ அவனே எல்லா விதங்களிலும் உண்மையை உணர்கிறவன் .

கீதை
13 : 31 (அழிவுறும்)சரீரங்களின் தனிப்பட்ட அடையாளங்களை காண்பதை நிறுத்தி எல்லாவற்றிலும் பரந்துவிரிந்துள்ள (அழிவற்ற)பிரம்மத்தை –(உயிராகிய கடவுளையும் ; பரமாத்வாவாகிய நாராயணனையும்) உணர்கிறவனே அநுபூதி அடைகிறவன் .

கீதை
13 : 32 அழிவற்ற ஆத்மாவின் நித்தியத்தன்மையை உணர்ந்தவன் ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீகமான பரமாத்மாவை தன்னில் காண்கிறான் . அவன் சரீரத்தில் வீற்றிருந்தாலும் அதன் செயல்களால் பந்தப்படாத பக்குவத்தை அடைகிறான் .

கீதை
13 : 33 நுண்ணிய இயற்கையினால் உயிர் எங்கும் பரவி எதிலும் வீற்றிருந்தாலும் அவைகளால் களங்கப்படாமல் இருக்கிறதோ அப்படியே உயிரில் நிலைபெற்ற ஆத்மாவினால் உடலால் களங்கப்படாத தன்மையை அடையமுடியும் .

கீதை
13 : 34 அப்படிப்பட்ட ஆத்மா (உயிராகிய கடவுளில் நிலைபெற்ற ஆத்மா) ஒரே ஒரு சூரியன் இந்த உலகம் முழுவதையும் பிரகாசமாக்குவது போல முழு உடலையும் பிரகாசமாக்கும் .

கீதை
13 : 35 இவ்வாறு உடலுக்கும் (ஷேத்ரம்) உடலின் உரிமையாளனுக்கும் (ஷேத்ரக்ஞன்- ஜீவாத்மா) உள்ள வேறுபாட்டை ஞானத்தால் உணர்ந்து யாரெல்லாம் கடவுளில் நிலைக்கின்றார்களோ அவர்கள் ஜட இயற்கையின் பந்தத்திலிருந்து ஒவ்வொன்றாக விடுபடுவார்கள் அதாவது முக்திகளை  அடைவார்கள் .

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எது முக்தி ?

ஆன்மீக வட்டாரங்களில் முக்தி என்ற பதத்தை இறைவனோடு கலந்து இல்லாமல் போதல் – அதாவது சூன்யவாதம் போல பிரயோகப்படுத்துகிறார்கள் . ஆனால் பரமாத்மா இங்கே தெளிவுரை வழங்கி இருக்கிறார் . முக்தி என்பது இல்லாமல் போவதல்ல ; அழிவற்ற ஜீவாத்மா ; தான் உலகியலில் வாழ்ந்ததால் தொடர்பு கொண்டிருந்த ஜட இயற்கையின் முக்குனங்களிளிருந்தும் அவற்றால் உண்டான ஆறுதீய குணங்களிலிருந்தும் பலவகையான மாயைகளிளிருந்தும் ஒவ்வொன்றாக தன்னை விடுவித்துக்கொள்வது ஒரு ஒரு
முக்தி . இவ்வாறு பல முக்திகள் அடைந்து சகலவற்றாலும் பந்தப்படாத தன்மையை அடைதலே சிக்தி . அதாவது சகலமும் பரமாத்மாவின் விரிவாக இருந்தாலும் அவைகளால் பாதிப்பில்லாத இயல்பில் பரமாத்மா எவ்வாறு உள்ளாரோ அவரைப்போலவே ஜீவாத்மாவும் எவைகளாலும் பாதிப்பிலாத சுதந்திர நிலையை அடையும் நிலை சித்தி என்றால் அதற்கு முந்திய படிகள் முக்திகள் .

முக்திஎன்பது நிலை முன் உறு சாதனம்
 அத்தகவு என்றஎன் அருட்பெருஞ்ஜோதி
சித்திஎன் பதுநிலை சேர்ந்த அநுபவம்
அத்திறல் என்றஎன் அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார் அகவல் 


முக்தி – விடுதலை அடைதல் – இவையெல்லாம் ஆத்மா அடைகிற பரிபக்குவத்தை குறிப்பதாகும் . இதற்கு ஜீவாத்மா உடலுடன் உறவுள்ள ஆத்மா என்ற நிலையிலிருந்து உயிருடன் உறவுள்ள ஆத்மாவாக பயிற்சித்தல் என்பதே வழி . ஏனென்றால் ஆத்மா என்பது பந்தப்படும் இயல்புள்ளது . ஆனால் உயிரோ எதனாலும் பந்தப்படாமல் எப்போதும் தூய்மையாகவே இருப்பது .

சகலவற்றிற்கும் சாட்சியாக தனது அன்பால் உயிரினத்தை வாழவைத்துக்கொண்டிருப்பது . தெய்வீக அன்பால் அது ஒரு உடலில் தங்கிக்கொண்டிருக்கும் வரை அந்த உடல் மரிக்காமல் இயங்கிக்கொண்டு விணை ஆற்றிக்கொண்டிருக்கும் . அது அன்பு மற்றும் சாட்சி நிலை மட்டுமே . அந்த உயிரினம் செய்யும் நன்மை தீமை எதனாலும் அது பந்தப்படுவதில்லை . இதுதான் விடுதலையின் ரகசியம் , இவ்வாறுதான் பரமாத்மாவும் எதனாலும் பந்தப்படாதவராக உள்ளார் . அதற்கு அவரும் கடவுளில் நிலைத்துள்ளார் . அதுவே ஜீவாத்மா கற்றுக்கொள்ளவேண்டியது ,அல்லது அநுபூதி .

வேதங்களின் சாரம் என்ன யுகபுருஷன் இயேசுவிடம் கேட்கப்பட்டது :


மத்தேயு
22:37. இயேசு அவனை நோக்கி: கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;


38. இது முதலாம் பிரதான கட்டளை .

39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

40. இவ்விரண்டு கட்டளைளிலும் வேதங்கள் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி