Tuesday, July 17, 2012

கீதை 16 : தெய்வீக மற்றும் அசுர இயல்புகளின் மீதான சமநிலை யோகம்





கீதை 16 :1 யுகபுருஷன் கிரிஷ்ணர் கூறினார் : பரதனின் மைந்தனே , அச்சமின்மை ; சத்வத்தில் நிலைத்து ஞானத்தை விருத்தியாக்க மென்மேலும் தன்னை தூய்மை செய்தல் ; மனக்கட்டுப்பாட்டோடு தாமச குணங்களை(இச்சைகளை)துறந்து எதையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் ; தன்னை உணர்வதால் வேத இரகசியங்களை தெளிந்து எளிமையடைதல்;

கீதை
16 :2 சகல உயிர்களிடத்தும் (ஒருமைப்பாடு) தயவு ஊற்றெடுப்பதால்எவருடத்திலும் எதிலும் குற்றம் உள்ளதை சகிப்பவனாகவும்; அமைதியும் அஹிம்சையும்  , வாய்மையும் ,ததும்பி கோபத்தை வென்ற தவவாழ்வும் ; பேராசையிலிருந்து விடுப்பட்ட நிறைவும் ;வேட்ககேடான செயல்களை தவிர்க்க மனஉறுதியும் ;

கீதை
16 :3 விட்டுகொடுக்கும் மனோபலமும் ; பொறாமையை கடந்த தூய்மையும்; சுயமதிப்பை தேடாத சாந்தம் வழியும் தேஜஸும்– இவையே தெய்வீக இயல்பில் நிலைக்கிறவனின் குணாதீசயங்களாகும்

ஸத்வ ஸம்ஸுத்திர் - சத்வ குணத்தையும் சுத்தம் செய்து நிர்க்குணமாகுதல் பூர்த்தியடைந்தாலே முழுமை கிடைக்கும் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர் . ஒளிதேகம் உண்டாக்குதல் – மரணமில்லா பெருவாழ்வு பெறுதல் என்பது வள்ளலாரால் சகலருக்கும் பிரபலப்படுத்தப்பட்டுவிட்டது . இதுவே சன்மார்க்க காலம் என்று இந்த பிரபலத்தை பற்றியே வள்ளல் பெருமானும் சொல்லியிருக்கவேண்டும் .ஏனென்றால் இதற்கு முன்பே பலர் ஒளி சரீரம் அடைந்தார்கள் என்றாலும் அது சாமானிய மனிதனுக்கு அறிய கிடைக்கவில்லை . ஆனால் இன்றோ பலருக்கும் தெரிந்திருக்கிறது
தெய்வீக இயல்புகள் எவை எவை என்று யுகபுருஷன் இந்த மூன்று சுலோகங்களில் சொன்னாலும் கடைசியாக இவை அனைத்தாலும் சரீரத்தில் தேஜஸ் உண்டாகும் என்றே குறிப்பிட்டுள்ளார்

சுய மதிப்பை தேடாத சாந்தம் வழியும் சுபாவத்தால் அந்த சாதகனுக்கு ஒரு தெய்வீகக்கலை ஜொலிக்குமாம் . ஞானிகளிடத்து ஒரு தேஜஸ் ஜொலிக்கிறது என்று பேசிக்கொள்கிறார்களே அது உள்ளே ஆத்மா ஒளியாக விளைந்து கொண்டுள்ளது என்பதற்கு ஒரு அடையாளம்

அந்த ஒளி சரீரத்தை அடைய சில யோக அப்பியாசங்களை – வாசி யோகம் சித்த யோகம் குண்டலினி யோகம் போன்ற அப்பியாசங்களை ஒரு குருவிடம் பெற்று நன்கு பயிற்சித்து விட்டால்போதும் ; அல்லது ஒரு மாகாமந்திரத்தை நாமசங்கீர்த்தனம் செய்துவிட்டால் போதும் ; அல்லது பாராயணம் செய்து ஜீவகாருண்யத்தை கடைபிடித்தால் போதும் அல்லது ஒரு மார்க்கத்தை கடைப்பிடித்து பேரை மாற்றிக்கொண்டால் போதும் என்பதுபோல ஒரு அப்பிராயம் உள்ளது . இந்த பயிற்சிகள் அனைத்தும் ஒரு உளவு – கருவி – சாதனம் மட்டுமே . இவைகளை ரெம்ப தீவிரமாக பல மணி நேரம் பல வருடங்கள் அப்பியாசித்து விடுவது அவசியம்தான் ; ஆனால் அதனால் மட்டுமே நிச்சயமாக ஒளி சரீரம் பெற்று விடமுடியாது

எந்த ஞானிகளும் ; மகான்களும் ; குருமார்களும் ஒரு வழிமுறையை உளவாக சொல்லியிருக்கிறார்களே தவிர – அது பரிபாக்குவத்திற்கு பாதை அமைத்து கொடுக்குமே தவிர அதுவே முழுமையை கொடுக்காது

அந்த முழுமை உள்விளைகிற தெய்வீக இயல்புகளால் உண்டாகும் . தெய்வீக இயல்புகளை உண்டாக்க ஒவ்வொரு பாதையும் பயன்படுமே தவிர பாதையே தெய்வீக இயல்பு அல்ல .

பாதைகள் ஒரு இடத்திற்கு நாம் செல்ல பயன்படுமே ஒழிய பாதையே நாம் சென்று சேர்கிற இடம் அல்ல . ஏனென்றால் இன்றைக்கு ஆன்மீக வட்டாரத்தில் இந்த மாயை ; பாதைகளையே சென்று சேர்கிற இடமாக கருதிக்கொண்டு ஆகா ஓகோ இதுதான் உயர்ந்த பாதை என கூத்தாடிக்கொண்டு அந்த இடத்திலேயே நின்றுகொண்டு இருக்கும் போக்கு பலரிடம் காணப்படுகிறது

நல்ல ஒலிபெருக்கிகளாகவும் ; சொம்புகலாவும் பாதை துவங்கும் இடத்தில் நுழைந்து விட்டதற்கே பெருமை பாராட்டிக்கொண்டு அங்கேயே நின்றுகொண்டு இருக்கிறார்கள் . அதை விட்டு ஒரு தம்பிடி கூட நகர்வதில்லை

அதனால்தான் கடவுளின் நாலாவது அதிதூதரும் ; சற்குருவுமான நாராயணி – மகிசாசுரணை அழிக்க அவதரிக்க வேண்டி வந்தது . சுய மகிமையால் உண்டாகும் பெருமை என்ற அசுரன் பல சாதகர்களை – ஆன்மீக பயணத்தில் எவ்வளவோ கரை கடந்து வந்தாலும் அப்படியே மயக்கி அமுக்கி விடுகிறான் . இவனை யாராலும் அழிக்க முடியவில்லை . முந்தய மூன்று அதிதூதர்களாலும்; நாராயணனாலும் சிவனாலும் ஷேசனாலும்வெல்லமுடியவில்லை . என் மார்க்கம்தான் பெருமை உசத்தி என்ற மகிசாசுரணை யாராலும் வெல்ல முடியவில்லை . சீடர்களின் சொம்புகளை யாராலும் மட்டுப்படுத்த முடியவில்லை .

ஆகவேதான் வேள்வித்தீயிலிருந்து சமரசவேதத்தை உடையவளாக நாராயணி வெளிப்பட்டாள் . அவள் ஏற்கனவே பரத்தில் இருந்தவள்தான் . ஆனாலும் பூமியில் அவள் செயல்பாடு இவ்வெளிபாட்டால் வந்தது . இதுவே சமரச சன்மார்க்க காலம் . அது எல்லாவற்றிலும் உண்மைகள் இருப்பதையும் ஏற்றுக்கொள்ளும் ; எல்லாவற்றிலும் கலப்படங்கள் கலந்து விட்டதையும் அங்கீகரிக்கும் . எதையும் தலையில் தூக்கி வைத்தும் ஆடாது எதையும் காரிகாரி துப்பவும் செய்யாது

எது நல்ல குணம் . சத்வ குணம் மட்டுமே . கீழானவைகள்  தமஸ் மற்றும் ரஜோகுணம் . சத்வ குணத்தை வளர்ப்பதால் மட்டுமே முந்தய கீழான குணங்களை அழிக்க முடியும் . அவ்வாறு சத்வ குணத்தை அடையவேண்டும் அடைந்த பிறகோ அந்த குணத்தையும் களைந்து நிர்க்குணமாகவேண்டும் . அப்போது என்னென்ன சுபாவங்கள் நம்முள் விளையும் என்பதே மேலே உள்ள பட்டியல் . அந்த தெய்வீக சுபாவங்கள் நம்முள் பெருகி பெருகி முத்தாய்ப்பாக சுயம் – நான் என்பதையே கடந்து கடவுளிடம் ஒரு கருவியாக ஆகி விடுவதால் – அந்த ஆறாம் அறிவு முற்றிய ஞானத்தோடு இருந்தாலும் அதையும் கடந்து ஒரு கருவியாக மட்டுமே உள்ள பூஜ்ய நிலை அடையமுடியும் அப்போது ஸ்தூல சரீரம் அவசியம் இல்லாத – ஒளிசரீரம் விளைந்து விட்ட ஒரு நிலையில் ஆத்மா – தேவராக மாறி பரலோகத்தில் நுழையும் .

தேவர்கள் எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் சுயமாக எதையும் சிந்திக்கவும் மாட்டார்கள் ;  செயல்படவும் மாட்டார்கள் . இறைவன் ஏவாத எதையும் செய்யமாட்டார்கள் . கருவியாக மட்டுமே இருப்பார்கள் .

மனிதனுக்கும் தேவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் . மனிதன் சுயத்தை சார்ந்து அந்த ஆறாம் அறிவை கொண்டு நல்லதையும் கெட்டதையும் செய்துகொண்டே இருக்கிறான் . பூமியிலேயே பல பிறவிகள் பல நாடுகளில் பல மதங்களில் பிறந்து சுற்றித்திரிகிறான் . அதில் யார் கடவுளை சரணடைந்து ஆறாம் அறிவை கடந்து கருவியாக மட்டும் மாறுகிரானோ அவன் தேவராக பூமியை கடக்கிறான்

அது எந்த யோக அப்பியாசத்தாலும் வராது ; எந்த மார்க்கத்தாலும் வராது ; தன்னை உணர்ந்து தெய்வீக இயல்புகளை பெருக்கி ; அப்புறம் அதையும் விட்டுவிடுவதால் ; சகலவற்றையும் விட்டு விடுவதால் வரக்கூடியது.

இருக்கிறேன் என்ற இருப்பைத்தவிர ஏதும் இல்லாது இருக்க முயலுங்கள் .சகலத்தையும் இறைவனுக்கே அர்ப்பணியுங்கள் . முழு சரணாகதி என்றால் என்னவென்று கற்றுக்கொள்ள முயலுங்கள் .
கீதை 16 :4 பாண்டுவின் மகனே :தெய்வீக இயல்புகள் பரிபக்குவத்தையும் ; அசுர இயல்புகள் தேக்கத்தையும் அளிக்கின்றன . ஆனாலும் கவலைப்பட ஒன்றுமில்லை ; ஏனென்றால் தெய்வீக இயல்புகளுடனும் படைக்கப்பட்டுள்ளாய்

கீதை 16 :5 இவ்வுலகில் உள்ளோர்களில் தெய்வீக மற்றும் அசுர இயல்புகள் இரண்டும் கலந்தே உள்ளன .தெய்வீக குணங்களைப்பற்றி விபரமாக கூறினேன் ; இனி அசுர குணங்களைப்பற்றி கேட்பாயாக :

கீதை 16 : 6  தன்முனைப்பு , ஆணவம் , கடும் பற்று , கோபம் ,கொடூரம் ,அறியாமை ஆகியவைகள் அசுர இயல்புகளாகும்

கீதை 16 : 7 அசுர இயல்பு மேலோங்கியோரிடம் வளர்ச்சிக்கு ஏதுவான செயல் எது ; வளர்ச்சிக்கு தடையான செயல் எது என்ற பிரித்தறிதல் இருப்பதில்லை. தூய்மையும் , வாய்மையும் , இணக்கமான நடத்தையும் அவர்களிடம் இருப்பதில்லை

அசுர இயல்புகள் மற்றும் அதன் ஆதிக்கத்தில் உள்ளோர் பற்றி யுகபுருஷன் கிரிஷ்ணர் விளக்கத்தொடங்கும் போதே அனைவருக்கும் ஒரு நற்செய்தியையும் ; நம்பிக்கையையும் தருகிறார் ; அது மனிதர்களாக உள்ள சகலரும் தெய்வீக இயல்புகளுடனேயே படைக்கப்பட்டுளோம் என்பதே . அசுர இயல்புகளும் ஒவ்வொருவரிடத்திலும் இருந்தாலும் அவைகளைப்பற்றி அச்சப்படத்தேவையுமில்லை என்ற வாக்குறுதி இங்குள்ளது . உலகின் எந்த வேதங்களும் ; மதங்களும் இந்த வாக்குறுதியை கொடுக்காமல் இருப்பதில்லை

அது ஏதென்றால் மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் என்பதே . நான் மட்டுமல்ல எனக்கு வெளியே உள்ள ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சொருபங்களே . மனிதனை அவமானப்படுத்துவது என்பது இறைவனை அவமானப்படுத்துவதற்கு சமம் . ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள மரியாதை – சுய மரியாதை என்பது இறைவனே அவருக்கு கொடுத்துக்கொள்ளும் மரியாதை .

பிற மனிதர்களுக்கு முடிந்தளவு இடரல்   (தொந்திரவு) இல்லாமல் வாழ முயற்சிப்பதே அஹிம்சை . மனிதர்களுக்கு நம்மால் உண்டாகும் நோவுகளுக்காக நாம் பயந்து நடக்கவேண்டும் . அதுவே இறைஅச்சம் . மனித நேயம் கடவுளின் மீது நமக்கு இருக்கும் பக்தியின் அளவுகோல் .

யுகபுருஷன் இயேசுவும் கூட யுகமுடிவில் நியாயத்தீர்ப்பு நடக்கும் போது அதில் தேரும் ஆத்மாக்களிடம் இறைவன் சொல்லும் வார்த்தை இதுவே என்றார்

மத்தேயு   25
35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.

37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?

39. எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய மனிதர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

ஒரு மனிதன் மதிக்கப்பட்டால் இறைவன் அங்கு மதிக்கப்படுகிறார் . ஒரு மனிதன் அவமதிக்கப்பட்டால் இறைவனும் அங்கு அவமதிக்கப்படுகிறார் .

ஒரு மனிதன் முழுமையடைந்து பரலோக பாக்கியம் – மரணமில்லா பெரு வாழ்வு பெற்றால் அது இறைவனுக்கும் ஒரு வெற்றி . பரமாத்மாவின் ஒரு பின்னமான ஜீவாத்மா ஒன்று மாபெரும் மாயையிலிருந்து தேரியதால் – பல்லாயிரம் பிறவியெடுத்து உழன்று கொண்டிருப்பதிலிருந்து தேரியதால் அதுதான் இறைவனுக்கும் ஒரு சாதனை .

வளர்ச்சிக்கு ஏதுவான செயல் – பரிபக்குவம் ; வளர்சிக்கு ஏதுவற்ற செயல் தேக்கம் – இவைகள் தான் ஒவ்வொரு பிறவியிலும் ஆத்மாவில் விளைபவை . உலக காரியங்களை உண்ணவும் உடுக்கவும் பிள்ளைகளை வளர்க்கவும் எல்லோருமே செய்துகொண்டே தான் இருப்பார்கள் . ஆனால் அவையெல்லாம் ஆத்மாவிற்கு எதையும் கொடுப்பதில்லை . உலக வாழ்வின் ஊடாக ஆத்மா வளர்ச்சியுற்று பரிபக்குவம் அடைந்ததா அல்லது தேங்கிப்போனதா என்பதே ஒவ்வொரு பிறவி முடியும்போதும் மிஞ்சுவது .

ஆத்மாவில் தெய்வீக இயல்புகள் வளர்ந்துள்ளதா அல்லது அசுர இயல்புகள் வளர்ந்துள்ளதா என்பதே அடுத்து எங்கு எந்த குடும்பத்தில் எந்த மதத்தில் எந்த நாட்டில் பிறப்போம் என்பதை தீர்மானிக்கிறது .

ஒவ்வொரு பிறவியிலும் ஒரு ஆத்மா வளர்சியை நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பரலோகத்தில் மிகுந்த சந்தோசம் உண்டாகுமாம்

லூக்கா  15
7.  மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசு உச்சரித்துள்ள நீதிமான்கள் பாவிகள் என்ற வார்த்தைகளை தெய்வீக இயல்புகள் அசுர இயல்புகள் என்று புரிந்துகொள்ளவேண்டும் . நம்மிடம் உள்ள பல தெய்வீக இயல்புகளுக்காக இறைவன் பாராட்டுகிற வேலையை செய்வதில்லை . ஆனால் நம்மிடம் உள்ள ஒரு அசுர இயல்பை நாம் உணர்ந்து அதை விடுவதற்கான முயற்சியில் அதனுடன் போராடி விழுந்து விழுந்து சிராய்த்தாலும் கடவுளுக்கு அது மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும் .
நாம் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை ; விடவேண்டும் என்று போராடினாலேபோதும் அதுதான் மனந்திருந்துகிற பாவி என்பது .

ஆனால் எதையும் சடங்காக மாற்றி அதன் ஜீவனை புதைக்கிற மனித இயல்பு ; மதவாதிகளான கிறிஸ்தவர்களை பிடித்துக்கொண்டு விட்டது . அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வது  ; தண்ணீரிலே முழுகி பெயரை வெள்ளைக்கார பெயராக மாற்றிவைத்துக்கொள்வதுவே மனந்திருந்துவது என்பதாக கொச்சைப்படுத்திக்கொண்டு இந்தியர்களை ஐரோப்பியர்களாக மாற்றி குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள் .

காணாததை கண்டு விட்டது போல மதம் மாறிவிட்டாலே பாவம் தீர்ந்துவிடும் என்பதான அஞ்ஞானத்தினால் அவர்கள் செக்கு மாடு போல மதம் என்ற  கடும் பற்று அல்லது வீண் அபிமானம் என்ற அசுர குணத்திற்கு பலியாகிறார்கள் .

மரத்திற்கு மரம் தாவுவதால் எந்த வளர்ச்சியும் வருவதில்லை . ஆனால் நம்மை உணர்ந்து நமது அசுர இயல்புகளை கண்டறிந்து மனந்திரும்பினால் ; தெய்வீக இயல்பை வளர்த்துக்கொள முயற்சித்தால் அது வளர்ச்சி . அந்த வளர்ச்சியையும் – நாம் இருக்கும் சமுதாயத்தில் இணக்கமாக இருந்து வளர்த்துக்கொள்ளவேண்டும் . இணக்கமின்மை என்பதும் ஒரு அசுர இயல்பே .
ஏற்கனவே உள்ள எதையும் திடீரென தூக்கி எறிவது எப்போதும் சரியல்ல . அவற்றிலிருந்து ஒரு படி முன்னேறினாலே இந்த பிறவிக்கு போதுமானது

இறைவன் எப்போதும் புரட்சி செய்கிரவறல்ல ; வளர்சிதை மாற்றத்தை படிப்படியாக செய்கிறவர் . இறைவனது இயல்பை புரிந்துகொள்வதே நாம் அவருக்கு பிரியமான காரியம் செய்ய வழிவகுக்கும் .

இன்றைய சுழலில் எல்லோரையும் ஒரு படி கைதூக்கி விட இணக்கமாக எதை செய்வதோ அதுதான் வளர்சிக்கு ஏதுவானது   
கீதை 16 :8 இப்பிரபஞ்சம் மாயை என்றும் ; உண்டாக்கியவர் இல்லாமல் இயற்கையாக தோன்றியது என்றும் ; தன் எழுசசியாலும் காமத்தாலும் அன்றி வேறொன்றும் அடிப்படை இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள் .

கீதை 16 :9 இத்தகைய நம்பிக்கையால் சிற்றறிவுடையோர் தமது ஆத்மாவை அழித்துக்கொள்ளும் பலனற்ற காரியங்களையும் ;கொடூரமான காரியங்களிலும் ஈடுபட்டு உலகை துன்பத்திற்குள்ளாக்குகின்றனர் .

கீதை 16 :10 திருப்தியடையாத இச்சைகளிடம் சிக்கிக்கொண்டு ; வீண் பெருமைக்கும் ; உயர்வு தாழ்வு மனப்பாண்மைக்கும்  பேதங்களுக்கும்   அடிமையாகின்றனர் . நிரந்தரமற்றவைகளில் லயித்து வேண்டாத  காரியங்களில் வளர்கின்றனர் .

கீதை 16 :11 உலகவாழ்வுக்கான கவலைகளும் ; பயங்களும் அளவற்றவை . அவைகளுக்கு இடம் கொடுத்து பிரளய காலம் வரையிலும் புலனின்பங்களை நிறைவு செய்வதே ஒரே ஒரு லட்சியமாக ஆகி விடுகிறது

கீதை 16 :12 இவ்வழியில் ஆசைகள் என்னும் கயிறுகளால் நூற்றுக்கணக்காககட்டப்பட்டு இச்சைகளிலும் வெறுப்புகளிலும் தவித்து புலனின்பங்களுக்காக எப்படியேனும் செல்வத்தை சேர்க்கவே முயற்சிக்கின்றனர் .

மனிதனுக்கு ஒரு பெரிய எதிரி மாயாவாதம் . இது மிக உயர்ந்த பாவணையில் ஆன்மீகவாதிகளிடமும் ; தாழ்ந்த பாவணையில் துன்மார்க்கர்களிடமும் காணப்படும் .

உயிரோடு இருக்கும் வரைதான் எல்லாம் ; அப்புறம் ஒன்றுமே கிடையாது ; இருக்கும் வரை அனுபவிப்போம் ; அதில் கொஞ்சம் மனிதாபிமானத்துடனும் அனுபவிப்போம் ; சமூக சீர்திருத்தம் ; சுயமரியாதை இப்படியே போய் கடைசியில் முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதுக்கு ; எப்படியும் திறமையாக கெட்ட பேர் வராமல் எதையும் செய்யலாம் என்றெல்லாம் போய் கடைசியில் பாவ சுரணை அற்றுப்போய் முழு அயோக்கியத்தனமாகவே சிலரின் வாழ்வு ஆகி விடுகிறது

ஆரம்பத்தில் எந்த மனிதனும் தைரியமாக பாவங்கள் செய்வதில்லை . எல்லோரும் நல்ல சிந்தனையோடும் ; மனிதாபிமானத்துடனும்தான் இருப்பார்கள் . ஆனால் வாழ்க்கையில் குற்ற உணர்வு கூடகூட பாவ சுரணை கொஞ்ச கொஞ்சமாக குறையும் ; அப்போதுதான் கொடூரங்கள் தைரியமாக திறமையாக அரங்கேற்றப்படும் . விளைவு நிச்சயமாக நமக்கு ஒருநாள் திரும்ப வரும் ; கடவுள் ஒருவர் இருக்கிறார் ; சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதான இறைஅச்சம் அடிப்படையில் ஒரு நல்ல காரணி . இறைஅச்சம் இல்லாத மனிதாபிமானங்கள் நீண்ட நாள் நீடிப்பதில்லை . தான் தாழ்ந்து இருக்கும்வரை புரட்சி பேசும் பலர் கொஞ்சம் உயர்ந்ததும் ரெம்ப மோசமாக வாழத்தொடங்கி விடுகிறார்கள் என்பதற்கு சாட்சிகள் பல உள்ளன .

ஆண்டியாய் இருக்கும் வரை அம்பலங்களை குறை பேசுவார்கள் ; ஆனால் அம்பலம் ஆகி விட்டாலோ பரம்பரை பணக்காரர்களை காட்டிலும் புதுப்பணக்காரர்களின் ஆட்டம் பலமானதாகவே இருக்கும் .கோவணத்தில் நாலு காசு இருந்தால் கோழி கூப்பிட பாட்டும் வரும் ; ஆட்டமும் வருவது மனித இயல்பு .

இறைஅச்சம் என்ற நல்ல அடிப்படையை யாரெல்லாம் எதன் காரணமாகவும் விட்டு விடுகிறார்களோ அது தீமையில் தான் முடியும் பகுத்தறிவு என்ற பெயரால் உண்டான கடவுள் மறுப்போ அல்லது எல்லாம் இயற்கைதான் ; கடவுள் என்று ஒருவர் தனியாக இல்லை என்பதுபோன்ற யோகமார்க்கங்களாலும் ; எல்லாம் எனக்குள்ளாகத்தான் இருக்கிறது ; கடவுள் எனக்குள்ளாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டதால் நீ ஞானமார்க்கியாக ஆகி விட்டாய் ; உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டாய் என கடபாடமாக சொல்லிக்கொடுக்கப்படுவதாலும் முடிவு என்னவோ தீமையில்தான் முடிகிறது

நிச்சயமாக துன்மார்க்கியும் ; நவீன நாத்திகவாதம் என்னும் மாயாவாதத்தில் நிலைத்துள்ள ஆன்மீகவாதியும் ஒருவரல்ல . ஆனால் முந்தியவரால் சமுதாயத்திற்கும் தனக்கும் ஒரு வகையில் தீமை என்றால் மாயாவாதியாலும் வேறு வகையில் சமுதாயத்திற்கும் தனக்கும் தீமை . வளர வேண்டிய ஒரு ஆத்மாவை எப்படியேனும் கட்டிப்போட்டு தடுத்து வைக்க ஆவிமண்டல அசுரர்கள் ஆன்மீகவாதிகளுக்கு மாயாவாதத்தையும் உலக பற்றுள்ளவர்களுக்கு  துன்மார்க்கத்தையும் தூண்டி விடுகிறார்கள்

இந்த இரண்டு பிரிவினருக்கும் ஒரே ஆவியே பின்னணியில் செயல்படுகிறது

எப்படி பூமியில் ஒவ்வொரு உணர்வுக்கும் குணத்திற்கும் தனித்தனியே மூலிகைகள் ; தனிமங்கள் இருக்கின்றனவோ அதுபோல பரலோகத்தில் ஒவ்வொரு குணத்திற்கும் ஆவிகள் இருக்கின்றன . தேவர்கள் என்று சொல்லப்படுவோர் இத்தகைய பணிவிடை ஆவிகளே . குறிப்பிட்ட குணத்துடன் குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்வதற்காக படைக்கப்பட்ட ஆவிகள் . இவர்கள் யாருமே மனிதனைப்போல – கடவுளின் சாயலில் முழுமையானவர்களாக படைக்கப்படவில்லை

இந்த தேவலோக ஆவிகளில் சில கடவுளை பிரிந்து சுயேச்சையாக அசுரர்களாக ஆகி விட்டார்கள் .

இவர்களே மனிதன் யாரும் தேறி பரலோகம் வந்து விடக்கூடாது என்பதற்காக பலவகையான மாயைகளை – அசுர குணங்களை மனிதர்களுக்கு துண்டி விடுகிறவர்கள்

அண்டத்தில் உள்ளதெல்லாம் பினடத்திலும் உள்ளது என்ற ஒரு அடிப்படை சூத்திரத்தை நாம் மறந்து விடலாகாது

பிண்டத்தில் எந்த ஒரு பிரச்சினைக்கும் அண்டத்திலும் காரணம் இருக்கும்
 
கீதை 16 : 13 இன்று இவ்வளவு என்னால் அடையப்பட்டுள்ளது .இவ்வாறு இன்னும் பல பவிசுகளையும் பதவிகளையும் என் மனம் விரும்பியபடி அடைந்து விடுவேன் .இன்ன இன்ன ஆஸ்திகள் உள்ளன .அது இன்னும் பலமடங்கு அதிகரித்து விடும்

கீதை 16 : 14 எதிரிகளை நான் அடக்கி விட்டேன் . இன்னும் எவ்வளவு எதிர்ப்புகளையும் நான் அடக்கி விடுவேன் . நானே சர்வ வல்லமை உள்ளவன் . சகலவற்றையும் அனுபவிப்பவன் ; எதையும் சாதிக்கும் திறமையும் பலமும் உள்ளவன் .

கீதை 16 : 15 குற்றேவல் செய்யும் ஆள் பலமும் துதிபாடிக்கூட்டமும் என்னைப்போல வேறு யாருக்கு இருக்கின்றனர் ? அவர்களுக்கு வாரியும் வீசுகிறேன் ; கோவில் புண்ணிய காரியங்களும் செய்கிறேன் என்று அவர்கள் அறியாமையால் பிதற்றுகிறார்கள் .

சுயமதிப்பீடு ; தற்பொழிவு ; தற்பெருமை ; கர்வம் என்று சொல்லப்படும் அஹம்பாவம் என்னும் அசுர குணத்தை இங்கு ஸ்ரீகிரிஷ்ணர் விவரித்து காட்டுகிறார்

உலக மனிதர்கள் பலர் இப்படித்தான் பேரோடும் புகழோடும் இருந்தார்கள் . நிறைய சாதித்தார்கள் . கொஞ்ச நேரம் பிரகாசித்து விளக்கு அணைந்து விடுவதைப்போல அவர்களை கொஞ்ச காலத்தில் உலகம் மறந்தும் விட்டது . நம் கண்ணெதிரே எத்தனை பேரை பார்த்துவிட்டோம் ? அவர்களின் சந்ததியாவது நிலைக்கிறதா ? அதுவும் தள்ளி முள்ளி கொஞ்ச காலம்தான் .

புதுசு புதுசாக யாரோ எப்படியோ மேலே வருகிறார்கள் . அப்புறம் காணாமலும் போய் விடுகிறார்கள்

எதுவும் நிலைப்பதில்லை .கொஞ்ச காலம்தான் .

ஏழு தலைமுறைக்கு மேல் எந்த சொத்தும் நிலைப்பது கடினம் என்றொரு உலக வார்த்தை இருக்கிறது . பல அரண்மனைகள் குப்பை மேடுகளாக கிடக்கின்றதை பார்க்கிறோம் .

ஆனாலும் அந்த கொஞ்ச காலத்தில் பலவான்கள் ஆடும் ஆட்டம்தான் என்ன ? முந்தய காலத்தையும் அவர்கள் நினைப்பதில்லை ; இனி வரும்காலத்தில் என்ன நேருமோ என்பதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை . இன்று என்னவேண்டுமானாலும் கூசாமல் செய்து விடுகிறார்கள் .

அவர்கள் தங்களின் சாதனைகளை அதிகம் சுயமதிப்பீடு செய்து தங்களுக்கு தாங்களே பாராட்டிக்கொண்டு தடுக்கி விழுகிறார்கள்

சுயமதிப்பீடு செய்து கொள்ளாமல் இருக்க முடியுமா ?

அதுதான் ஞானம் பெறுவோர்கள் அடைய முயற்சிக்க வேண்டிய ஒன்று .

என்னால் எதுவுமேயில்லை . நான் திட்டமிட்டதால் மட்டுமே இவைகள் நடந்து விடவில்லை . என்னைக்காட்டிலும் எத்தனையோபேர் திறம்பட திட்டமிட்டு சிறப்பாகவும் முயற்சித்தார்கள் ; ஆனால் அனுகூலம் வரவில்லை எனக்கு சில வழி வாசல் திறந்தது . அதனால் நான் அவ்வழியில் முன்னேறினேன் என்று யார் தாழ்மையோடு இருப்பார்களோ அது ஆன்ம உயர்வுக்காக குணம் .

ராஜரிஷி – ராஜயோகி என்று சிலரை புராணங்களில் சொல்கிறார்கள் . இவர்கள் ராஜ்யபரிபாலனத்தில் இருந்தபோதும் இப்படி சாட்சியாக மட்டுமே இருந்தார்கள்

கடவுள் தன்னைக்கொண்டு செய்விப்பதில் கருவியாக மட்டுமே இருக்கிறேன் என்ற ஒரு மனநிலை . தன்னை அந்நிய ஆள் போல பாவித்துக்கொள்ளும் மனநிலை . கர்ம யோகத்தின் சூட்சுமங்கள் புரியுமிடத்து மட்டுமே அதில் ராஜயோகம் முகிழ்த்து மலரும் .

ஆன்மீக வாழ்வுக்கு முயற்சிக்கும் சாதகர்களும் இப்படி பல தரத்தில் பல இடங்களில் சறுக்கி விழுந்து முன்னேறாமல் போய் விடுகிறோம்

எந்த ஒரு ஆன்மீகவாதிக்கும் ஒரு நாள் ஒரு பிறவியில் முழுமையை அடைவதுதான் லட்சியம் . நடக்கும் என கடவுளால் வாக்களிக்கப்பட்டதும் ; கடவுளது சொந்த பராமரிப்பில் ஒவ்வொரு ஆத்மாக்களும் வளர்க்கப்படுவதும் மெய்யே .

அந்த முழுமையை நெருங்கும்போது கொஞ்சம் ராஜயோகமும் குருத்துவமும் சித்திக்கவும் செய்து ; உலக மனிதர்களைப்போலவே அஹம்பாவமும் வந்து கீழே விழுவதற்கும் ஏதுவாகிறது

யோகமார்க்கத்தின் உடன் பிறந்த கேடுகளில் இந்த அஹம்பாவமும் இருக்கிறது . இப்படி இப்படி யோகம் செய்து ; அந்த நிலை அடைந்து இந்த நிலை அடைந்து இப்படி ஆகி விடலாம் என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறதே அதில் மனித முயற்சி மட்டுமே இருக்கிறது . நோக்கம் உயர்வானதுதான் ஆனாலும் அதிலும் சுயம் இருக்கிறது .

குருமார்கள் பலர் இப்படி அடைந்த அனுபவத்தை பாடி வைத்திருக்கிறார்கள் . இதில் மறைபொருளாக பல விசயங்கள் இருக்கிறது ; அவர்கள் எதை சொல்ல எப்படி எழுதியிருக்கிறார்கள் ; இதை புரிந்து கொள்வது ஒரு சாதனை போல தெரிவதால் அதை அடைந்து விட்டாலே போதும் என்றெல்லாம் சுய முயற்சியின் மீதே நம்பிக்கை இருக்கிறது ; ஆனால் அதில் எவ்வளவு முயற்சித்தாலும் தெய்வ அனுக்கிரகம் இல்லையாயின் ஒன்றும் நடக்கவில்லை என்பதை அறிதலே ஞானத்தின் தொடக்கம்

கடவுளுக்கு கீழ்படுதலே ஞானத்தின் தொடக்கம்
கடவுளை சரணடைவதே ஞானத்தின் ஊற்றுக்கண்
கடவுளைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன் என அவ்வப்போவது வாயிலாவது சொல்லிக்கொண்டிருப்பதே உத்தமம்

அவ்வாறு சொல்லத்தொடங்கி வாயில்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ; செயலில் அவ்வாறு இல்லையே என தன்னிலையை உணரத்தொடங்கி மெய்யாகவே அவரை சார்ந்து கொண்டு வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ளத்தொடங்குவோமே அதுவே ஞானத்தின் வளர்ச்சி

கீதை 16 : 16அனேக சிந்தனைகளால் (சித்திகளால்) குழப்பமுற்று ; மோக மாயைகளால் சூழப்பட்டு ; இச்சைகளிலும் அனுபோகத்திலும் லயித்து தூய்மையற்ற நரக வாழ்வை நோக்கி இழிகின்றனர்

கீதை 16 : 17 செல்வம் அந்தஸ்து போன்றவைகளின் மயக்கத்தால் தன்னில்தானே திருப்தியும் அஹம்பாவமும் வளர்ந்து பிரபலமான    வழிபாடுகளும் கூட செய்கின்றனர் .(திருவிழாக்கள்) வழிபாடுகளின் அடிப்படைகள் எவை என்பதின் புரிதலில்லாமலேயே தற்பொழிவோடு வழிபாடு செய்கிறார்கள் .

கீதை 16 : 18 அஹம்பாவம் ; அந்தஸ்து ; காமம் ; குரோதாதிகளால் தனது சரீரத்தில்தற்பொழிவு கொண்டு பிறரது சரீரங்களில் துலங்குகின்ற  பரமாத்மாவுடனும் உயிருடனும் முரண்பட்டு அதனால் என்னையும் கடவுளையும் நிந்திக்கின்றனர்

கீதை 16 : 19 சுயபொழிவால் பிறரிடம் முரண்பட்டும் கருனையற்றும் நடப்பவர்கள் இவ்வுலக வாழ்வில் படிப்படியே அசுர இயல்புள்ள கர்ப்பங்களில் பிறவியெடுத்து தாழ்ந்த நிலையை அடைகின்றனர்

கீதை 16 : 20 அசுர இயல்புள்ள கர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்போர்என்றுமே என்னையும் கடவுளையும் உணரமுடியாத அளவு இழிவான கதியை நோக்கி செல்கின்றனர் .

சுயம் ; தற்பொழிவு மிகமிக முக்கியமான எதிரி . மரணமில்லா பெரு வாழ்வு பெற கடரப்படவேண்டிய ஒன்று .

எப்படி உலகியல் மனிதர்கள் செல்வம் ; சுயஅந்தஸ்து ;காமகுரோதாதிகளால் தற்பொழிவடைந்து தன்னிலும் பிறரிலும் துலங்குகின்ற பரமாத்மாவையும் கடவுளையும் எதிரியாகவும் போட்டியாகவும் கருதி முரண்பட்டு கருணையற்று வாழத்தொடங்குகிரார்களோ அதைப்போலவேதான் சித்திகள் ; யோகங்களில் மட்டும் நம்பிக்கை கொண்டு வளர்கிற சாதகனின் நிலையும் ஆகிவிடுகிறது எனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் நான் தான் கடவுள் என்றே சிந்தித்து அவர்களையறியாமலேயே அடுத்தவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்ற சொரனையை மறந்து செயல்களை செய்வதற்கு ஆளாகி விடுகிறார்கள் அடுத்தவருக்குள்ளும் இருக்கும் கடவுளோடும் பரமாத்மாவோடும் போட்டிபொறாமை உண்டாகி விடுகிறது

பக்தி மார்க்கத்திலும் நாராயணா நாராயணா அல்லது சிவசிவ என எங்கோ இருப்பவரை அனுதினமும் அழைத்து அன்பு காட்டி விட்டு தனக்கு அடுத்த மனிதனுக்குள்ளிருக்கும் நாராயணனை ; சிவனை அவமதித்து விடுகிறார்கள்

ஒருவன் கடவுளை நேசிக்கிறேன் என்று சொல்லியும் ; தான் கண்ணில் கண்ட மனிதனை நேசிக்காதவன் ஒரு பொய்யன் . தான் கண்ணில் கண்ட மனிதனை நேசிக்காதவன் கண்ணில் காணாத கடவுளை எப்படி நேசிப்பான் ? என்பது யுகபுருஷன் இயேசுவின் கேள்வி .

சகலருக்குள்ளும் சிவன் சரீரமாக இருப்பதையும் ; நாராயணன் ஆத்மாவாக இருப்பதையும் ; கடவுள் உயிராக இருப்பதையும் உணராதவன் எங்கோ இருப்பவராக பக்தி கொள்வதும் வீணானது ; அல்லது எல்லாமே எனக்குள்ளாகத்தான் இருக்கிறது என ஞான அலப்பல் செய்தாலும் அதுவும் வீணானது .

மனிதநேயம் அற்ற ஆன்மீகம் மாய்மாலமானது

அன்பே கடவுள் என்ற பிரபலமான வாசகத்தின் உள்ளார்ந்த அர்த்தம் கடவுளை உணராமால் அன்பை உணரமுடியாது என்பதே . கடவுளை உணர்ந்தவர்களிடத்து மட்டுமே அப்பழுக்கற்ற – சுயநலமற்ற அன்பு வெளிப்படமுடியும் .

கருணை ; கிருபை சில குருமார்களிடத்து பொங்கி வழிந்தது என்று உலகம் சாட்சி சொல்கிறதே அது அவர்கள் கடவுளை உள்ளார்ந்து உணர்ந்த அளவின் வெளிப்பாடு .

அவர்கள் கடவுளை எவ்வளவு ஆழமாக உணர்ந்திருந்தார்களோ ; அவ்வளவு கடவுளின் கருணையும் கிருபையும் அவர்களின் மூலமாக உலகில் வெளிப்பட்டிருக்கும் .

I கொரிந்தியர்13
1. நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

2.
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

3.
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

4.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

5.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

6.
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

7.
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

8.
அன்பு ஒருக்காலும் ஒழியாது. 


கீதை 16 : 21 நரகத்திற்கு அழைத்து செல்லும் மூன்று கதவுகள் உள்ளன . அவை காமம் ; வெறுப்பு ; பேராசை என்பனவாம் .ஆத்மாவை அழிவுக்குள் நடத்தும் இவை மூன்றையும் களைந்தால் ஞானமடையலாம் .

கீதை 16 : 22 இச்சைகளின் இம்மூன்று விதமான வெளிப்பாடுகளுடன் போராடி அவற்றை களையும் பாதையில் தன்னை உணரும் ஆத்மா ஞானத்தை அடைகிறது .இந்த இலக்கில் பயணிப்பவனே பரலோகத்தை அடைவான் .

கீதை 16 : 23 சாஸ்த்திரங்களின் உண்ணதமான விதிகளை புறக்கணிப்பவன் ; இச்சைகளை பூர்த்தியாக்க மனம் போன போக்கில் போபவன் ஒரு போதும் நிம்மதி அடைவதில்லை . எந்த சித்திகளையும் அடைவதுமில்லை ; முடிவான இலக்கான பரலோகத்தையும் அடைவதுமில்லை .

கீதை 16 : 24 எனவே சாஸ்த்திரங்கள் ; சமுதாய சட்டங்களின் உள்ளார்ந்த உண்மைகளை உணர்ந்து எது செய்யத்தக்கது எது செய்யத்தகாதது என்பவைகளை தெளிந்து ஞானமடைக . சாஸ்த்திரங்களில் வழிகாட்டப்பட்டுள்ள வாழ்க்கையின் ஊடாக மட்டுமே இப்பூமியில் உண்ணதம் எய்த முடியும் .

யுகபுருஷன் ஸ்ரீகிரிஸ்ணர் ஆத்மாவை ஏகத்துக்கு அழிவுப்பாதையில் நடத்தும் மூன்று நரகத்தின் கதவுகளைப்பற்றி எச்சரிக்கிறார் . அவை காமம் ; வெறுப்பு ; பேராசை என்பனவாம் . புலனிச்சைகள் என்பவைகளிலிருந்தே இம்மூன்று கேடுகளும் வெளிப்படுகின்றன .

விருப்பு வெறுப்புகள் நமது தேவைகளின் அடிப்படியிலேயே எழுகின்றன . புலன்கள் தங்களின் தேவைகளை வெளிப்படுத்தாமல் இருக்காது . அவைகள் தங்களின் இச்சைகளை பூர்த்தியாக்க வேண்டும் என்று ஆத்மாவை கேட்டுக்கொண்டே இருக்கும் .

புலன்களில் இன்பம் இல்லாமல் இல்லை . ஆனால் அவைகளில் திருப்தி ஒரு போதும் இல்லை ; அவை நிரந்தரமானதும் இல்லை ; தற்காலிகமான அந்த இன்பங்களை நிறைவேற்ற ஆசை கொள்ளும்போது ; முயற்சிக்கும்போது அது பிறருக்கும் ; சமுதாயத்திற்கும் தீங்கு விளைவித்து பாவங்களையும் துன்பங்களையும் விளைவித்து விடுகிறது . அது நமக்கே கேடுகளாக பல பிறவிகளுக்கு திரும்ப வந்து நம்மையும் நமது குடும்பத்தையும் பிடித்து ஆட்டுகிறது . அதனால் துக்க சாகரத்தில் உலழவேண்டியுள்ளது . அப்படி துக்கசாகரத்தில் பல பிறவிகள் எடுத்து உலன்ற ஆத்மாக்களுக்கு உள்ளறிவாக – ஞானமாக நிதானம் – பக்குவம் விளைகிறது .

பக்குவப்பட்ட ஆத்மாக்கள் புலனிச்சைகளை நிறைவேற்ற துடிப்பதில்லை . அளவுமுறையோடு அனுபவித்தால் போதும் . முறைகளுக்கு உட்படாத எவைகளையும் சந்தர்ப்பம் கிடைத்து அனுபவித்தாலும் அது கேடாகவே திரும்ப வருகிறது .

அளவு முறையோடு அனுபவிக்க மட்டுமே ஆசைகள் தகுதியானவை என்ற பக்குவம் புலன்களை அடக்குவதாக – யோகமாக பரிணமிக்கிறது . வாழ்வே சகஜ யோகம் என்பதை உணரவேண்டும் .

ஆசைகளில் அளவுமுறை அறிந்து தெளிவதே ஞானம் . அதுவே பேராசை அற்ற தன்மை . ஆனால் சரீரத்தின் புலன்கள் இந்த அளவுமுறையப்பற்றி அக்கறை கொள்வதில்லை . அது ஆத்மாவில் இச்சைகளை துண்டிவிட்டுக்கொண்டுதான் இருக்கும் . பட்டறிவால் விளைந்த இறையச்சம் ; சமூக பயம் இருந்தால் மட்டுமே ஆத்மா அதனோடு உள்நாட்டு யுத்தம் செய்து கடவுளின் கிருபையால் அதைக்கடந்த நிலையை அடையமுடியும் . தேவை தேவையின்மையை கடந்த ஒரு சமநிலை ; அதுவே யோகம் . தன்னில் தானே திருப்தியுற்று கடவுளோடு கலந்த நிலை ; விருப்புவெறுப்புகள் வெல்லப்பட்ட நிலை – இந்த மனச்சமநிலையே யோகம் .

அன்றாட வாழ்வின் ஊடாக தனது பலகீனங்களை உணர்ந்து அதனுடன் போராடி அதை கடந்த நிலையே யோகநிலை . ஒவ்வொரு பலகீனமாக கடறும்போதும் ஒரு சித்தி .

அடிப்படையில் பேராசையே அசுரகுணம் . பேராசையை அடக்கிய மனம் சத்வ குணத்தில் நிலைக்கும் . ஞானமார்க்கத்தில் பயணிக்கும் .

பேராசையை களைந்து விடும்போது மட்டுமே காமகுரோதாதிகளால் பாதிப்புகள் உண்டாகாதவாறு மனிதன் தப்பமுடியும் .

விருப்புவெறுப்புகள் ஆசைகளில் இருந்து உண்டானாலும் ; பேராசையே அவைகளை கொழுந்துவிட்டு எரியச்செய்கிறது .

ஆசைகளை நிறைவேற்ற துடிக்கும்போது கூடவே அவற்றை நிறைவேற்ற இடைஞ்சலாக இருப்பவைகள் மீது போட்டிபொறாமையுடன் கூடிய வெறுப்பும் வளர்ந்து விடுகிறது .

அவரவர் வாழ்நிலைமைகளில் மனிதர்கள் நமது காரியத்தில் குறுக்கே வருகிறார்கள் . இது திட்டமிட்டு நம்மை அவர்கள் எதிர்ப்பவர்களாக நமக்கு காட்சிப்படுத்தப்படுகிறது . அப்போது சிறுக சிறுக நம்மை சுற்றியுள்ளோர் மீது வெறுப்பு வளர்கிறது . அதனால் மனிதநேயம் மறைந்து அன்பு அற்றவர்களாக உள்ளார்ந்த அர்த்தத்தில் பரமாத்மாவுடனும் கடவுளுடனும் போட்டி பொறாமை கொள்பவர்களாக மாறிவிடுகிறோம் .

கீதை 16:18 ல் பிற மனிதர்களில் வீற்றுள்ள பரமாத்மாவான என்னையும் உயிரான கடவுளையும் அவமதிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு மனிதர்களைப்பற்றி கூறப்பட்டுள்ளது .

பிற மனிதர்களிடம்உள்ள குறைகள் குற்றங்களைப்பற்றி பேசிக்கொள்வது கூட ரெம்ப ஆழமான அர்த்தத்தில் தவறாகவே முடிகிறது .

அப்படி ஒருவரைப்பற்றி பேசிக்கொண்ட விசயம் ; ரெம்ப நாள் கழித்து அதே தவறை நாமும் செய்ய ஆளாகி ; இந்த தவறை செய்வதற்கும் என்னென்ன நிர்பந்தங்கள் ; சூழ்நிலைகள் மனிதனை அழுத்துகின்றன ; சாக்குபோக்குகளை மனம் கற்பிக்கிறது என உணரும்படியாக கடவுள் செய்துவிடுகிறார் .

ஏனென்றால் யாரைப்பற்றியும் பேசிக்கொண்ட விசயங்கள் ஒருவகையில் அந்த நபரில் உள்ள ஆத்மாவையும் உயிரையும் பற்றி பேசிக்கொண்ட விசயங்களே . அந்த ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு பின்னம் . அந்த உயிர் கடவுளின் ஒரு அங்கம் .

நாமும் முந்தய பிறவிகளில் அதே குறைகளை செய்பவர்களாக இருந்து கடவுளின் கிருபையால் அதை கடந்து விட்டிருக்கலாம் . மனித முயற்சியால் மட்டுமே எந்த குறைகளையும் கடந்து விடமுடியாது . செய்த பிழைகளுக்கு கடவுளின் மன்னிப்பால் அன்றி பிராயச்சித்தம் செய்து கணக்கை நேர் செய்யவும் முடியாது .

நாளையே சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்த்தால் இந்த தவறை நாம் செய்யமாட்டோம் என்பதற்கு நம்மாலேயே உத்தரவாதம் கொடுக்கவும் முடியாது .

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்க்காமல் ; அதை நம்மால் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கமே ; அப்படி செய்பவர்களை பற்றி புறம் பேசவும் வைக்கிறது . அப்படி பேசும்போது அதன் தொழில்நுட்பங்களைப்பற்றி அலசிஅறிந்து கொள்வதால் சந்தர்ப்பம் வாய்த்ததும் பலமடங்கு திறமையாக செய்துவிடுவோம் .

ஊழலை அம்பலப்படுத்தும் அரசியல்வாதிகள் பதவிக்கு வந்ததும் விஞ்ஞான ஊழல் – பல மடங்கு திறமையோடும் பிடிபடாமலும் செய்வதைப்போல .

சகலரது குறைகளும் மனித இயல்புதான் என்று அங்கீகரிக்கும் பக்குவம் வராமல் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் வராது .சாத்வீகம் விளையாது . நாம் காணும் எல்லா குறைகளும் நம்முள் இருந்தவைகளே . அல்லது நாமும் முந்தய பிறவியில் செய்தவையே .

சகலரது குறைகளையும் அங்கீகரிப்பது அவர்களின் பின்னணியில் உள்ள பரமாத்மாவையும் கடவுளையும் மதிப்பது .

சகலரது குறைகளை அங்கீகரித்தால் மட்டுமே அவர்களின் நிறைகளையும் மதிக்க நம்மால் முடியும் . விருப்புவெறுப்புகள் இன்றி உள்ளதை உள்ளது என்று நிதானிக்க முடியும் .

உள்ளதை உள்ளது என்று உணர்வது கடவுளை அறிவதற்கு சமம் .

பிறரது குறைகளால் வெறுப்பு அடையாமல் ; அவர்களால் நமக்கு துன்பம் வராமல் காத்துக்கொள்ள முயற்சிப்பதும் ; கடவுளிடம் பிரார்தித்து நிவாரணம் கிடைக்கும்வரை சகித்துக்கொள்வதும் ; அவர்களுக்கு ஒத்துழையாமல் இருப்பதும் ; அல்லது அவர்களை விட்டு ஒதுங்கி சென்றுவிடுவதும் எக்காரணம் கொண்டும் அவர்களை குற்றப்படுத்தாது இருப்பதும் மட்டுமே உயர்வுக்கு உரிய வழி .

இப்படிப்பட்ட வாழ்க்கையே சாத்வீகம் ; அஹிம்சை .

சகலரையும் தெய்வத்தின் சாயலாக உணரும் தெய்வீக அன்பு நம் இதயத்தில் ஊற்றப்படாமல் சாத்வீகம் சாத்தியமில்லை . மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கையும் ; சற்குரு இயேசுவின் சமாதான கொள்கையும் இந்த அடிப்படையை சார்ந்தவையே .

தனது குறைகளையும் நிறைகளையும் உணர்ந்து அவற்றில் சமநிலை அடையாதவன் ; அன்றாட வாழ்வின் ஊடாக சமநிலையை காத்துக்கொள்ளாதவன் ; பிறரின் நிறைகுறைகளில் சமநோக்கு அடைவது சாத்தியமே இல்லை .

அவன் பிறர்குறை பேசி கடவுளையும் பரமாத்மாவையும் நிந்திக்கிரவனாகவே - அவர்கள் மீது போட்டிபொறாமை கொள்கிரவனாகவே இருப்பான் .

இது ஒரு பயங்கரமான உண்மை . நாம் பக்தி செய்கிறோம் ; வழிபாடு பூஜை புனஸ்காரங்கள் செய்கிறோம் ; யாத்திரை செல்கிறோம் ; தியானம் செய்கிறோம் யோகாப்பியாசங்கள் செய்கிறோம் ; சத்சங்கம் கலந்து உபதேசம் கேட்கிறோம் ; அடியவர்களுடன் சம்பாசனை செய்து புளகாங்கிதம் அடைகிறோம் ; நற்காரியங்கள் தானதர்மங்கள் செய்கிறோம் ; இவ்வளவு செய்துவிட்டும் பிற மனிதர்களின் குணங்களால் விருப்புவெறுப்பு அடைந்து எரிச்சலுற்று அந்த இறைவன் மீதே போட்டிபொறாமை கொள்கிறோம்

பெரியபெரிய காரியங்களை செய்துவிட்டு சின்னதாக கடவுளுடன்  சண்டைக்காரனாகவே இருந்து விடுகிறோம் .

அதனால்தான் கீதை 16 ஐ தெய்வீக மற்றும் அசுர இயல்புகளின் மீதான சமநிலை யோகம் என்று சற்குரு கிரிஷ்ணர் பெயர் வைத்திருக்கிறார் .

இந்த சரீரத்தை ஒளி உடம்பாக மாற்றும் வரை ; பூமியில் உள்ளகாலம் வரை நம்மிடமும் பிறரிடமும் தெய்வீக மற்றும் அசுர இயல்புகள் இருக்கத்தான் செய்யும் . இவைகள் ஆவி மண்டல சக்திகளாலும் துண்டி விடப்படும் . சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உண்டாக்கப்படும் . ஆனால் அவைகளில் சமநிலை நிர்வகிப்பதுவே சகஜ யோகம் .

இந்த சகஜ யோகம் பக்தியில்லாமல் ; தன்னை உணராமல் ; பிறரையும் விருப்புவெறுப்பு இன்றி உணராமால் சாத்தியப்படாது .

ஊரோடு ஒத்து வாழாமல் சாத்தியப்படாது . சகஜ யோகி யாரையும் எதையும் குற்றப்படுத்த மாட்டான் . சமாதான சமரச வாழ்வு . அவன் பார்வைக்கு எல்லோரையும் போலவே இருப்பான் . பாவிகளின் தோழன் என சற்குரு இயேசுவை குற்றம் சாட்டினார்களே அதுபோலவே இருப்பான் .

சமாதானம் என்பது முரண்பாடுகளை அழித்து விடுவதால் வருவது அல்ல . மாற்று கருத்து அல்லது மாற்று கொள்கை – மதங்களை அழித்து விடுவதால் வருவதல்ல . சகலவற்றையும் சகித்து இணக்கப்படுத்தி அவைகளை நல்லதை நோக்கி இழுத்து விடுவதே சமாதான சாத்வீக வாழ்வு .

யுகமுடிவு காலத்தில் ஈசா நபி வானத்திலிருந்து இறங்கி வரும்போது ஏற்கனவே பூமியில் சமாதானத்தை உண்டாக்கிய அல்மகதி ஒருவர் இருந்ததாக முகமதுநபி சாகும் முன்பு ஒரு கணவு கண்டார் .

அதை இசுலாமியர்கள் தங்கள் மார்க்கத்தில் ஒரு பெரிய வழிகாட்டி வந்து உலகில் மற்ற மதங்கள் அனைத்தையும் அழித்து உலகம் முழுவதையும் இசுலாமாக்கி விடுவார் என்பதாக சொல்லிக்கொண்டுள்ளனர் .

மாற்று மதங்களை ஒருகாலும் அழித்துவிடமுடியாது . அப்படி அழித்து விட்டால் அதன் பேர் சமாதானம் அல்ல . சமாதானம் என்றால் வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பது . சகலவற்றிலும் உள்ள உண்மைகளை அங்கீகரித்து ; அந்ததந்த சமுதாயத்திற்கு ; நாட்டிற்கு ; இனத்திற்கென்று ஏற்பட்ட பிரத்யேகமான வேறுபாடுகளை பெரிசு பண்ணாமல் சகித்துகொள்வது

சாஸ்த்திரங்கள் என்பது வேறு அந்த சாஸ்த்திரங்களின் அடிப்படையில் அந்தந்த நாட்டிற்கு என்று உண்டான சமுதாய சட்டங்கள் என்பது வேறு . ஆப்ராகாமிய வேதங்களில் திராவிட இனமல்லாத மற்ற இன மக்களுக்கு மட்டும் உண்டான சமுதாய சட்டங்கள் கிரிமினல் ஒழுங்குமுறைகள் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளன . ஆனால் அவையும் வேதம் என்பதாக புரிந்துகொண்டு இந்தியர்களை ஐரோப்பியர்களாகவும் அரபியர்களாகவும் மாற்றுகிற இன அழிப்பு வேலையை புனிதப்பணி என்பதாக அவர்கள் செய்துகொண்டு குழப்பத்தை உண்டாக்குகிறார்கள் .

ஆப்ராகாமிய வேதங்கள் மூலமாக கடவுள் ஒரே ஒரு உண்மையை மட்டுமே உலகிற்கு சொல்லியுள்ளார் . அது வெளிப்பட்ட அனைத்திற்கும் அதிபதிகளாக உள்ள அதிதேவர்கள் – சற்குருநாதர்கள் நாராயணன் ; சிவன் ; ஆதிசேஷன் ; நாராயணி (ஆர்க்ஏஞ்சல்ஸ் காப்ரியேல் ; மைக்கேல் ; யூரேல் ; ராபேல் ) என்பவர்களுக்கும் அப்பால் வெளிப்படாதவராகவும் அறியப்படாதவராகவும் கடவுள் உள்ளார் என்பதே .

ஆனால் கடவுள் இந்த நால்வரின் மூலமாக மட்டுமே செயல்படுகிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது .

முந்தய வேதமும் ஆதி வேதமுமான இந்துமதம் இந்த நால்வரையும்  தனித்தனியே முக்கியமாக கொண்டு உலகிற்கு அருளப்பட்டது . ஏனென்றால் அறியப்படாத கடவுள் இவர்கள் மூலமாக மட்டுமே வெளிப்பட்டார் .

அந்தந்த சற்குருநாதர்கள் கடவுளின் சார்பாக அந்தந்த மார்க்கங்களை அருளி அடியவர்களை சீர்படுத்தினார்கள் . ஆனால் மார்க்கங்கள் அவரவர் குருவை கடவுளுக்கு இணை வைத்து உயர்த்தி அடுத்த குருவை மட்டம் தட்டுவதாக மார்க்கபேதங்களை உருவாக்கத்தொடங்கி விட்டன . கலியுகத்தின் மாயைகளில் இவையும் ஒன்று .

இப்போதோ இந்த நால்வர் மூலமாக – இவர்களை சற்குருனாதர்களாக கொண்டு அறியப்படாத கடவுளை வழிபடுவது மட்டுமே முழுமையடைவதற்கான வழி என்ற சமரச வேதம் வெளிப்படையாகும் காலம் கனிந்துவிட்டது .

கடவுளின் பாதை எப்போதுமே புரட்சிப்பாதை அல்ல ; வளர்ச்சி பாதை . வளர்சிதை மாற்றம் உண்டாக்குவது .

ஏற்கனவே உள்ள சாஸ்த்திர சம்பிரதாயங்களை முற்றிலும் அழித்துவிட்டு புதிதாக ஒன்றை செய்வது என்பது குழந்தைத்தனமானது . அழிவை உண்டாக்குவது .

அந்த சாஸ்த்திர சம்பிரதாயங்களில் வளர்சிதை மாற்றம் உண்டாக்குவதே கடவுளின் பாதை .

மனிதனது சொந்த வாழ்வில் நன்மை தீமைகளின் மத்தியில் சமநிலை அடைந்தால் மட்டுமே சித்தி அடைவது சாத்தியம் என்பது எப்படி உண்மையோ அதுபோல சமுதாயத்திலும் ; சமயங்களிலும் ; மார்க்கங்களிலும் வளர்சிதை மாற்றத்தின் மூலமாக சமநிலை உண்டாவதே முழுமை அடைவதற்கான உத்தரவாதம் .

வரப்போகிற சமரச வேதம் இதையே செய்யப்போகிறது .

நாராயணன் நாமத்தினாலும்

சிவனின்
 நாமத்தினாலும் சேஷனின்

நாமத்தினாலும் காமாக்ஷியின்

நாமத்தினாலும்

கடவுள் உங்களை ஆசிர்வதிக்க

வேண்டுகிறேன்


அருட்பெருஞ்சோதி

அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்சோதி 



  





No comments: